ADDED : மே 16, 2026 03:25 AM

- நமது நிருபர் -: தினமும், சப்பாத்தி தின்று சலிப்பாக உள்ளதா; வேறு சுவையான சிற்றுண்டியை நாக்கு தேடுகிறதா; ஆலு மட்டர் பரோட்டா வீட்டில் முயற்சித்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என, பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில் சப்பாத்திக்கு தேவையான மாவை பிசைந்து, தனியாக வைக்கவும். அதன் பின், வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து, இரண்டு நிமிடம் கிளறவும்.
இதில் ஏற்கனவே வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள் துாள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும். அனைத்தும் சேர்ந்த பின், சிறிதாக நறுக்கிய கொத்துமல்லியை துாவவும்.
அதன் பின், சப்பாத்தி மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கவும். இதை, கல்லில் வைத்து தட்டவும். அதன் நடுவில் உருளைக்கிழங்கு, பட்டாணி கலவையை சிறிதளவு வைத்து, மீண்டும் உருண்டையாக்கி, நிதானமாக தட்டவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானதும் எண்ணெய் தடவவும். அதில், பரோட்டாவை போடவும். எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சூடான ஆலு மட்டர் பரோட்டா தயார்.
இந்த பரோட்டாவை, ஊறுகாய் அல்லது தயிர் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்!
