/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மரத்துண்டில் உருவங்களை வடிவமைக்கும் வாலிபர்
/
மரத்துண்டில் உருவங்களை வடிவமைக்கும் வாலிபர்
ADDED : மார் 01, 2026 05:15 AM

- நமது நிருபர் -
மரத்தில் செய்யப்படும் மைசூரு கலைப்பொருட்கள் மீதான ஆர்வத்தால், தன் மென் பொறியாளர் பணியை ராஜினாமா செய்து, உலகளவில் தன் கலைக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார் மைசூரை சேர்ந்தவர்.
மைசூரு என்.ஆர்.மொஹல்லாவை சேர்ந்தவர் மோகன் குமார். மென்பொறியாளரான இவருக்கு, கலைப்பொருட்கள் மீது ஆர்வம் இருந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன், தன் பணியை ராஜினாமா செய்த இவர், முழு ஈடுபாட்டுடன் மைசூரு கலைப்பொருட்கள் தயாரிப்பில் தன் கவனத்தை செலுத்தினார். இவரது கடின உழைப்பால், உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், இவரின் கலைப்படைப்புகளுக்கு ஆர்டர்கள் குவிகின்றன.
இதுகுறித்து மோகன் குமார் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே எனக்கு, மைசூரின் பாரம்பரியமான மற்றும் நுணுக்கமான கலை படைப்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு மூத்த கைவினை கலைஞர்களே காரணம். அவர்கள் தான் என் கலை திறன்களை செதுக்கினர். என் கலை படைப்பு குறித்து அறிந்த பலர், என்னை தொடர்பு கொண்டு ஆர்டர் புக் செய்கின்றனர். எனவே, எம்.கே.என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நிறுவி, ஐந்தாறு கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து உள்ளேன்.
இக்கலையில் ஜாம்பவானான, கைவினை கலைஞர் புட்டராஜுவின் படைப்புகளில் இருந்தே எனக்கு உத்வேகம் கிடைக்கிறது. அவரது வடிவமைப்புகள் பல, என் படைப்புளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. நவீன விளக்க காட்சியுடன், கிளாசிக்கல் வடிவமைப்பையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதால், அதற்கு ஏற்ற வகையில் என் கலை பொருட்களை வடிவமைக்கிறேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் பல இடங்களில் நடந்த கண்காட்சியில், என் கலை படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளேன். பலரும் இந்த கலையை பார்த்தவுடன், எவ்வளவு விலை என்று கேட்கின்றனர். இது, எதனால் செய்யப்பட்டது என்று கேள்வி கேட்பதில்லை. அது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தவிர, அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துபாய் உட்பட பல நாடுகளில், மைசூரின் பாரம்பரிய கலை பொருட்களை காட்சிக்கு வைத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விபரங்களுக்கு 88673 93165 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

