/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
500 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்
/
500 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்
ADDED : ஆக 23, 2025 11:06 PM

சமூகத்திற்காக வாழ்பவர்கள் சிலரே. 25 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை சமூக சேவகர் ஒருவர் நல்லடக்கம் செய்து சேவையாற்றி வருகிறார்.
உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யானந்தா ஓல்காடு, 55; சமூக சேவகர். 'உடுப்பி மாவட்ட குடிமை குழு'வை நடத்தி வருகிறார். இக்குழு மூலம் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக, ஆதரவின்றி இறப்போரின் உடல்களை, தன் உறவினர் போன்று பாவித்து உரிய மரியாதை செலுத்தி, நல்லடக்கம் செய்து வருகிறார்.
பசி மயக்கம் 'ஒருவர் சுயநலத்துடன் வாழக்கூடாது. மாறாக சமூக சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கைக்கு அமைதி, அர்த்தத்தை தரும்' என, நித்யானந்தா ஓல்காடு உணர்ந்துள்ளார். இதனாலேயே திருமணம் செய்து கொள்ளாமல் சேவை செய்து வருகிறார். உடுப்பி மாவட்டத்தில் நாட்டின் பல மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வேலை தேடி வருவோர் பசி மயக்கம், உடல் நலம் பாதிப்பு போன்ற காரணங்களால், சாலையில் மயங்கி உயிரிழக்கின்றனர். இவ்வாறு சாலை ஓரத்தில் அல்லது எங்காவது இறந்து கிடந்தால், முதல் தகவல் போலீசுக்கு செல்கிறது.
அடுத்தது நித்யானந்தாவுக்குத் தான் செல்லும். மாவட்ட மக்களிடம் அவ்வளவு பரிட்சயம் அடைந்துள்ளார். இதுவரை 505 ஆதரவற்றோரின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
இவரின் சேவையை பாராட்டி, நன்கொடையாளர்கள் பலர் இணைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஆதரவற்ற நபர் உயிரிழந்து 45 நாட்கள் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இறந்தவரின் உறவினர்கள் யாரும் தொடர்பு கொள்ளாததால், பீடினகுட்டேயில் உள்ள ஹிந்து கல்லறையில் இறுதிச் சடங்கு செய்து, நல்லடக்கம் செய்தார்.
ஒன்று, இரண்டு ஆதரவற்றோரின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லும்போது, மாவட்ட மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ அதிகாரி, தடயவியல் நிபுணர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், இறந்தவரின் உடலக்கு மரியாதை செலுத்துவர். இவ்வாறு வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறார்.
நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம், சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், தொலைதுாரத்தில் இருந்து வந்து உறவினர்களை இழந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டர்கள் என யாரை பார்த்தாலும் உடனடியாக அவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்.
சிகிச்சை முடியும் வரை அவருடன் இருப்பார். முடிந்தால் அந்நபரை அவரின் உறவினர்களிடம் ஒப்படைப்பார். இல்லை என்றால், ஆதரவற்றோர் இல்லங்களில் அனுமதித்து விடுவார்.
அவர் மீண்டும் உறவினர்களுடன் செல்ல விரும்பினால், அவர்களை வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டு விடுவார். சமூகத்திற்காக நித்யானந்தா ஆற்றும் சேவை, உண்மையிலேயே நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
இது தவிர, சமூக நல பணிகள் மூலம் அவர் சமூகத்துக்கும் பங்களிப்பு செய்து வருகிறார். நகர சாலைகளில் ஏதேனும் குளறுபடிகள், பாலத்தில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது தரமற்ற பணிகள் நடந்தால், வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி, அனைவரின் கவனத்தை ஈர்ப்பார்.
உடுப்பி -- மணிப்பால் இடையே 10 ஆண்டுகளாக மேம்பாலப் பணிகள் நடந்து வந்தன. கொட்டும் மழையால், பிரதான சாலைகள் மோசமாக இருந்தன. இதை பார்த்த நித்யானந்தா, அங்கபிரதக் ஷணம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. அதன் பின், அந்த சாலையை சரி செய்தது குறிப்பிடத்தக்கது.
மரியாதை இதுகுறித்து நித்யானந்தா கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறேன். பலர் எங்கள் சமூக சேவையில் இணைந்து உள்ளனர். இதுவரை 505 உடல்களை, உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து உள்ளோம். உடுப்பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ஏழைகளும் பல்வேறு காரணங்களால் இங்கு தினமும் இறக்கின்றனர். இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், வாரிசுகள் இல்லாதவர்களின் உடல்களை நாங்களே நல்லடக்கம் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .