/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
பயம்.. பதற்றம்.. விலக சில வழிகள்!
/
பயம்.. பதற்றம்.. விலக சில வழிகள்!
UPDATED : செப் 15, 2022 05:09 PM
ADDED : செப் 15, 2022 05:02 PM

பதறிய காரியம் சிதறும்... என்பது எவ்வளவு உண்மை என அந்த நிலைக்கு நாம் செல்லும் போது உணர முடியும். ஆங்சைட்டி எனப்படும் மனப்பதற்றம் உணர்வு உங்களை அமைதியை இழக்க செய்யும். அதை கடந்து செல்ல நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். பொதுவாக பதற்றம் ஏற்பட முக்கிய காரணியாக இருப்பது பயம் தான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையால் தான் பதற்றம், கவலை வருகிறது. ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது.
ஒரேநேரத்தில் பல பிரச்னைகளுக்குத் தள்ளப்படுவதால், எவற்றை தீர்ப்பது என புரியாமல் , மனம் பதற்றத்துடனேயே இருக்கும். தேவையற்ற சிந்தனைகளும் பயங்களும் உருவாகும். இந்த பதற்ற உணர்வானது, வேலை, படிப்பில் உயர நினைக்கும் போது நம்மை அடுத்த நிலைக்கு செல்லவிடாமல் தடுக்கிறது. அவற்றை போக்க சில நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டால், எளிதாக வெல்லலாம்.
தியானம்:
![]() |
யோகா, தியானம் என்பது இந்தியர்கள் உலகிற்கு அளித்த கொடை என்றே கூறலாம். பயம், கவலை, பதற்றத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு தியானம் சிறப்பாக கைக்கொடுக்கும். உங்கள் மனதை அமைதிப்படுத்த இவை தான் சிறந்த வழி. தினமும் 10 நிமிடம் காலை, மாலை இருவேளை தியானம் செய்ய ஒதுக்குவது மிகவும் நல்லது.
நடனம்:
![]() |
தியானதிற்கு அடுத்தப்படியாக நடனம், உங்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் அதேவேளை கவலையை மறக்க செய்து மனதை உற்சாகப்படுத்தவும் உதவும். அதற்காக நீங்கள் நடனம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு கை கால்களை அந்த ரிதமிற்கு ஏற்றவாறு அசைத்தால் போதும்.
பிட்ஜெட் டாய்ஸ் (Figit toys)
![]() |
மனதை ஒருநிலைப்படுத்த இன்ஃபினிட்டி க்யூப், ஸ்மைலி பால், பாப்-இட் போன்ற பிட்ஜெட் டாய்ஸ்களை வாங்கிக்கொள்ளலாம். இவற்றை நீங்கள் வெளியே செல்லும் போது பையில் எடுத்துச் சென்று, பதற்றமான சூழலில் பயன்படுத்துங்கள். இந்த டாய்ஸ்கள் கவலையிலிருந்து உங்கள் மனதை திசைத் திருப்ப உதவுகிறது. மேலும் இவை உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவும்.
தரையில் படுத்துக் கொள்ளுங்கள்:
![]() |
திடீரென பதற்றம் ஏற்பட்டால், டைல்ஸ், மார்பிள் போன்ற குளிர்ந்த தரையில் நேராக படுத்துக்கொள்வது உங்களை நிதானமாக உணர உதவும். உடலுக்கு உடனடி குளிர்ச்சி அளிப்பதுடன், சிறிது நேரம் இப்படி வெறும் தரையில் படுப்பது, உங்களை அமைதியடைய செய்யும். உங்களை மேலும் சாந்தப்படுத்த கண்களை மூடி, நீண்ட சுவாசத்தை எடுத்து கொண்டு வாயிலிருந்து காற்றை வெளியேற்ற வேண்டும். சட்டென ஏற்படும் டென்ஷன் குறையும்.
இப்படியாக உங்கள் மனதை உங்கள் வசப்படுத்தி கொள்ளலாம். பதற்ற உணர்வு தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேலாக நீடித்தால் மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே மனதை வசப்படுத்துவோம்.





