பருவம் தப்பி பரவும் தட்டம்மையிலிருந்து எப்படி தப்பலாம்!
பருவம் தப்பி பரவும் தட்டம்மையிலிருந்து எப்படி தப்பலாம்!
UPDATED : டிச 01, 2022 01:49 PM
ADDED : டிச 01, 2022 01:44 PM

பருவநிலை மாற்றத்தால், தற்போது நோய்களும் பருவம் தப்பி வருகிறது. உதாரணமாக கேரளாவில் சமிபகாலமாக அதிக அளவில் தட்டம்மை பரவிவருகிறது. பொதுவாக வெயில் காலத்தில் தான் அம்மை நோய்கள் வரிசைக்கட்டி வரும். ஆனால் பருவ மழைக்காலம், குறைய தொடங்கி, குளிர்காலம் நெருங்கி வரும் வேளையில் இந்நோய் பரவி வருகிறது.
தட்டம்மை, 'மீசில்ஸ்' (Measles) என்ற வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இதை சின்னமுத்து, மணல்வாரி அம்மை, என அழைப்பர். பொதுவாக இந்த தொற்று வந்தால் தோலில் தடிப்புகள், காய்ச்சல், மூக்கொழுகல், குமட்டல், சிவந்த கண்கள் போன்ற அறிகுறிகளுடன் இரண்டு முதல் 3 வாரங்களுக்கு இருக்கக்கூடும். முகம், கழுத்து பகுதிகளில் தொடங்கி உடல் முழுவதும் தடிப்புகள், சிறு சிறு கொப்புளங்கள் 2 முதல் 3 நாட்கள் வரை காணப்படும். மேலும் மூட்டு இணைப்புகளில் குறைந்தது பத்து நாட்களுக்கு வலியும் வரலாம்.
எப்படி பரவும்:
![]() |
தட்டம்மை நோய்த்தொற்று காரணமாக மூக்கில் அல்லது தொண்டையில் இருந்து நீர் வடியக்கூடும். மேலும் அப்படி வெளியேறிய நீர், தும்மல், இருமல் போன்றவற்றால் பரவும். குறிப்பாக தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். மேலும் நோய் காரணமாக உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் அவை பழைய நிலைக்கு வந்த பிறகும் கூட நான்கு நாட்கள் வரையும், பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது. பொதுவாக தட்டம்மை தொற்றியவருக்கு, ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லாமல் உடம்பில் அது இருக்கும்.
தடுப்பூசி:
![]() |
ஒருவருக்கு அம்மை வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்புச் சக்தி உண்டாகும். அதுபோலவே தான் தடுப்பூசி செயல்படும். நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கவும் நோய்கள் நம்மைப் பாதிக்காமல் இருக்க செய்ய தடுப்பூசிப் போடலாம். குழந்தைகளுக்கு அதிக அளவில் அம்மை நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். அவர்களுக்கு அதை தாங்குவது மிகவும் கடினம். அவர்களை பாதுக்காக்கும் வண்ணம், அவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் ஒரு தடுப்பூசியும், 15 - 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படும். 15 - 18 மாதங்களில் தட்டம்மையைத் தடுப்பதற்காகப் போடப்படும் தடுப்பூசி 'எம்.எம்.ஆர் தடுப்பூசி' ஆகும். எம்.எம்.ஆர் எனும் தடுப்பூசி மூலம் மீசில்ஸ், மம்ஸ், ரூபெல்லா என்ற மூன்று வகையான அம்மை வைரஸ்கள் தடுக்கப்படும் குறிப்பாக உலகளிவில் தடுப்பூசியின் மூலமாக அம்மை நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தட்டம்மை வராமல் இருக்க என்ன செய்யலாம்:
• முதலில் நோய் தொற்றை பரவவிடாமல் இருக்க நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
• உடலையும் சுத்தமாக வைத்து கொள்ள காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்கலாம்.
• உணவுடன் நிறைய காய்கறிகள், மற்றும் தினமும் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
• நீர் சத்து அதிகமாக இருந்தால் அம்மை நோய் தாக்காது என கூறப்படும். அதனால் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
• இளநீர், மோர், ஜூஸ், பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


