/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பத்ரா ஆற்றில் சாகச படகு சவாரி!
/
பத்ரா ஆற்றில் சாகச படகு சவாரி!
ADDED : மார் 06, 2025 12:15 AM

சாகச படகு சவாரி எனும், 'ரிவர் ராப்டிங்' செய்ய தண்டேலி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான இடம் சிக்கமகளூருவிலும் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிக்கமகளூரு மாவட்டம், ஆண்டு முழுதும் ரம்மியமான சூழ்நிலையை தரும். சிக்கமகளூரின் வடக்கு திசையில் பாபா புடன்கிரி மலையும், முல்லியங்கிரி மலையும் அமைந்துள்ளது.
சாகச ரப்பர் படகு சவாரியான, 'ரிவர் ராப்டிங்' என்றால், அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தண்டேலி ராப்டிங் தான். ஆனால், பெங்களூரில் இருந்து 200 கி.மீ., தொலைவில் பத்ரா ஆற்றில் ரிவர் ராப்டிங் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.
இங்கு கோடை விடுமுறை நாட்கள் துவங்குவதால், பெரும்பாலானோர், இந்த காலகட்டத்தில் வருகை தருகின்றனர். அப்போது வெயிலின் அளவு 32 டிகிரி செல்ஷியஸ் இருக்கும். எனவே, ஜூன் முதல் அக்டோபரில் செல்வது சரியான நேரமாகும். அப்போது தான் பத்ரா ஆற்றில் சரியான அளவில் தண்ணீர் பாய்ந்தோடும்.
இந்த காலகட்டத்தில், மாவட்டத்தின் வெப்ப நிலை 16 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் இங்கு பயணம் செய்தால் எந்த தொந்தரவும் ஏற்படாது.
பருவமழை காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கன மழை பெய்யும். இவ்விரு மாதங்களில் திறமையான, அனுபவம் வாய்ந்தவரால் மட்டுமே நீரில் ராப்டிங் செய்ய முடியும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் பத்ரா ஆறு, ஏழு முதல் 8 கி.மீ., தொலைவுக்கு மலையை ஒட்டி பாய்கிறது. ராப்டிங் செல்வோருக்கு 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உங்களின் எடை 110 கி.மீ.,க்கு அதிகமாக இருக்கக்கூடாது.
ராப்டிங் செல்வோருக்கு தலைக்கவசம், உயிர் காக்கும் கவசம், துடுப்புகள் வழங்குவர். ரப்பர் படகில் புறப்படுவதற்கு முன்பு, நம்மை அழைத்துச் செல்வோர், என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விளக்குவர். இந்த சாகச படகு சவாரி திரில்லிங்காகவும், புத்துணர்ச்சியாகவும் அமையும்.
எப்படி செல்வது?
>> ரயிலில் செல்வோர், சிக்கமகளூரு ரயில் நிலையத்தில் இருந்து 70 கி.மீ., தொலைவு பயணம் செய்து ரிவர் ராப்டிங் பகுதியை அடையலாம்.
>> பஸ்சில் செல்வோர், சிக்கமகளூரு பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து செல்ல வேண்டும்.
- நமது நிருபர் -