/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த குந்தாத்ரி மலை
/
இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த குந்தாத்ரி மலை
ADDED : ஜன 29, 2026 06:42 AM

ஷிவமொக்கா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் குந்தாத்ரி மலை. நான்காம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஜெயின் துறவி ஆச்சார்யா குந்தகுந்தர், இங்கு தியானம் செய்தார்.
இதனாலேயே, இம்மலைக்கு குந்தாத்ரி மலை என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 3,200 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் 17 ம் நுாற்றாண்டில், 'பர்ஷ்வநாத் தீர்த்தங்கரா'வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் அமைந்து உள்ளது. அன்றைய காலகட்டத்தில் இங்கு வரும் துறவிகளுக்காக, கோவில் அருகிலேயே இரு தெப்பகுளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அடர்ந்த வனப்பகுதியில் இக்கோவில் அமைந்து உள்ளதால், மலையேற்றம் செய்வோருக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இது சொர்க்கமாகும். 7 கி.மீ., துாரம் கரடுமுரடான குறுகிய பாதை வழியாக மலையின் உச்சியை அடையலாம். இந்த பாதை வழியாக செல்லும் போது, இருபக்கமும் இயற்கையின் அழகை ரசித்தபடி செல்லலாம்.
நீண்ட துாரம் நடக்க முடியாதவர்கள், மலையின் உச்சிக்கு சிறிது கீழே, வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும், அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் வழியாக தான் நீங்கள் உச்சியை அடைய முடியும்.
சூரிய உதயத்தை பார்க்க விரும்புவோர், அதிகாலை 4:00 மணிக்கே தங்களின் மலையேற்றத்தை துவக்கினால் நல்லது.
மலையேற்றத்துக்கு தேவையான காலணி, ஜெர்கின், குடிநீர், தின்பண்டம் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.மலை உச்சியில் உள்ள கோவில் 6:00 மணிக்கு மேல் தான் திறக்கப்படும். எனவே, கோவிலுக்கு வெளியே உள்ள இடத்தில் இருந்தபடி 360 டிகிரி கோணத்திலும் உள்ள இயற்கையை கண்டு ரசிக்கலாம். அத்துடன், அங்கிருந்தபடி, வராஹி அணையின் நீர்த்தேக்க பகுதியை காணலாம்.
இங்கு மலையேற்றம் செய்ய கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. பொங்கலன்று இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர். இங்கு அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் செல்வது சிறந்தது. மாலை 6:00 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கிவிடுவது சிறந்தது. 6:00 மணிக்கு மேல் பனிமூட்டம் பாதையை மறைத்து, வாகனத்தை ஓட்ட சிரமத்தை ஏற்படுத்தும்.
- நமது நிருபர் -

