அடுக்குமாடி வீடு வாங்குவதில் சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள்!
அடுக்குமாடி வீடு வாங்குவதில் சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள்!
ADDED : ஜூன் 26, 2026 11:30 PM

தமிழகத்தில் நிலம் வாங்கி தனி வீடு கட்டி குடியேற வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைத்தாலும், எதார்த்த நிலை இதற்கு ஒத்துழைக்கும் வகையில் இல்லை. இதனால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் வீடுகள் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
பொதுவாக, காலி மனை அல்லது வீடு வாங்கும் போது, ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே உரிமையாளராக இருப்பார். அந்த சொத்து முழுவதும் அவர் பெயரிலேயே இருக்கும் என்பதால், தனி வீடுகளுக்கான ஆவணங்களை ஆய்வு செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படுவது இல்லை.
ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் விஷயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. பெரும்பாலான சமயத்தில், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், அங்கு மற்றவர்கள் சரி பார்த்து இருப்பர் என்ற எண்ணத்தில், அலட்சியமாக இருந்து விடுகின்றனர்
பொதுவாக அடுக்குமாடி திட்டங்களில், புதிய வீடு அல்லது பழைய வீட்டை வாங்குவதாக இருந்தால், அதற்கான நிலம் தொடர்பான அடிப்படை ஆவணங்களை ஆய்வு செய்யுங்கள். அந்த நிலம் தொடர்பான, 50 ஆண்டுகளுக்கான பத்திரப்பதிவு விபரங்களை வில்லங்க சான்று வாயிலாக ஆய்வு செய்யுங்கள்.
இதில், சொத்து பரிமாற்றங்கள் மட்டுமல்லாது, அதற்கு இணையாக பட்டா மாறுதல் குறித்த விபரங்களையும் கவனிக்க வேண்டும். வருவாய் துறை இணையதளத்தில் பட்டா மாறுதல் தொடர்பான பழைய விபரங்களை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நிலம், கட்டுமான நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டதா, அல்லது ஒப்பந்தம் போட்டு கூட்டு நடவடிக்கையாக குடியிருப்பு கட்டப்பட்டதா என்பதையும் விசாரியுங்கள்.
இத்துடன், சில இடங்களில், நில உரிமையாளரிடம் கட்டுமான நிறுவனம் பொது அதிகாரம் பெற்று இருக்கும். இவ்வாறு, பொது அதிகாரம் பெற்று கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால், அதில், விற்பனைக்கான அதிகாரம், கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
சில இடங்களில், கட்டுமான பணிக்கு மட்டும் வழங்கப்பட்ட பொது அதிகாரத்தை பயன்படுத்தி வீடு விற்பனை செய்யப்படும்.
அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி திட்டம் மேற்கொள்ளப்படும் நிலம் மொத்தமாக எத்தனை சர்வே எண்களில் பரவியுள்ளது? அந்த சர்வே எண்கள் ஒரே கிராம எல்லைக்குள் வருகிறதா என்பதையும் வீடு வாங்குவோர் துல்லியமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள சர்வே எண்களின் தொகுப்பாக அந்த நிலம் அமைந்து இருந்தால், பட்டா மாறுதல் போன்ற விஷயங்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாது, வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்பு தொடர்பான பணிகளிலும் பிரச்னை ஏற்படக்கூடும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
அடுக்குமாடி திட்டம் அமைந்துள்ள நிலம் மொத்தமாக எத்தனை சர்வே எண்களில் பரவியுள்ளது, அந்த சர்வே எண்கள் ஒரே கிராம எல்லைக்குள் வருகிறதா என்பதையும் வீடு வாங்குவோர் துல்லியமாக ஆராய வேண்டும்.
