PUBLISHED ON : ஜூன் 03, 2021

'புலிக்கு யார் மணி கட்டுவது?' என்று விவாதித்துக் கொண்டிருந்த மான்களின் கூட்டத்தில் 'நான் கட்டுறேன்' என கை உயர்த்திய மான் 'அதிசயம்'தானே?
திருவள்ளூர் குளத்துமேடு கிராமத்தின் 48 வயது மான்... பத்மாவதி.
மானும் ஊரும்
நான் பிறந்ததும், திருமணம் செஞ்சுகிட்டதும் இதே ஊர்லதான். அப்போ எங்க கிராமம் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துல இருந்தது. பழவேற்காடு ஏரிக்கு பக்கத்துல இருக்கிறதால மழை காலங்கள்ல எங்க கிராமமே தீவா மாறிடும். இடுப்பளவு தண்ணியில இறங்கிதான் பயணப்படணும். சாலை, குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்துல இருந்து ஆட்சியர் அலுவலகம் வரைக்கும் மனு கொடுத்தும் பிரயோஜனமில்லை. அந்த கோபம் தான் அன்னைக்கு என்னை அப்படி செய்ய வைச்சது!
புலிக்கு மணி
ஒரு விழாவுக்காக தொகுதி அமைச்சர் வர்றாருன்னு கேள்விப்பட்டு மனுவோட காத்திருந்தோம். ஆனா, அமைச்சர் கார் எங்களை பார்த்தும் கடந்து போயிருச்சு. அவ்வளவுதான்... கூட்டத்தை விலக்கிட்டு காரை விரட்டி ஓடினேன். போலீஸ் படை என் பின்னாடி விரட்டுது. நான் ஓடி வர்றது தெரிஞ்சு காரை நிறுத்தினார் அமைச்சர். தேவைகளை அவர்கிட்டே ஒப்பிச்சேன். சில மாதங்கள்ல ஊருக்கு சாலையும், குடிநீரும் கிடைச்சிருச்சு!
என் வாழ்க்கை
எங்க ஊர்ல கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் பெண்கள், அப்புறம் குழந்தைகள்... இவங்க எல்லாருக்கும் ஊட்டச்சத்து பிரச்னை இருந்ததால அங்கன்வாடி மையம் கொண்டு வர போராடினேன். சில குடும்பங்களுக்கு பட்டா நிலம் கேட்டு மனு கொடுத்து ஜெயிச்சேன். இந்தமாதிரியான பொது வேலைகளுக்கு மத்தியிலதான் என்னோட 5 பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணி கரை சேர்த்தேன். கணவருக்கு ஏரியில மீன்பிடிக்கிற தொழில். நான் நண்டு வளர்த்து விற்கிறேன். 'ஊருக்காக ஓடினா நம்ம வாழ்க்கை அழிஞ்சு போயிடும்'னு சொல்வாங்க; என் விஷயத்துல அது பொய்!
வாக்குமூலம்
நான் செய்ற காரியங்களுக்கும் என் குணத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஆரம்ப காலங்கள்ல நாலு பேர் இருக்குற இடத்துல என் கருத்தை சொல்றதுக்கே கூச்சப்படுவேன். எதிர்ல நிற்கிறவங்க தப்பு பண்ணியிருந்தாலும் அவங்ககிட்டே அதிர்ந்து பேசத் தோணாது.
இப்போ, எல்லா விஷயங்களையும் உறுதியா அணுகுற பக்குவத்தால ஒவ்வொரு காரியமா சாதிச்சுட்டு வர்றேன். தமிழ்ல எழுதத் தெரியாது; எழுத்துக் கூட்டி மெதுவாத்தான் படிக்க வரும். போதும்...
நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற படிச்சிருக்கணும்னு அவசியமில்லை; கேட்கத் தெரிஞ்சிருந்தாலே போதும்.
ஆசைகள் ஆயிரம்!
* 'கொரோனா' இல்லாத வாழ்க்கை வேணும்
* பேரன், பேத்திகள் கூடவே இருக்கணும்
* ஊருக்காக நிற்கணும்; கம்பீரமா வாழணும்.
