PUBLISHED ON : ஜூன் 08, 2021

பொதுவாக கனிந்த மனம் என்பது அனுபவத்தில் வாய்க்கும். ஆனால், செவிலியர்களுக்கோ பணியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே அம்மனம் வேண்டும்.
பணி துவக்கம்: 1996ம் ஆண்டு
முதல் களம்: செயின்ட் மேரிஸ் மருத்துவமனை, தர்மபுரி
பதவி: செவிலி
துறை அனுபவம்: 25 ஆண்டுகள்
'சேவை பணியில்தான் நீ பணியாற்ற வேண்டும்' என்று காவலர் தந்தை ஊட்டிய அறிவுரையால் வளர்ந்த உஷாராணி, பிளஸ் 2 முடித்ததுமே செவிலியருக்கான படிப்பை தேர்வு செய்தார். 57 வயதான இவர், தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் தற்போது செவிலியர் கண்காணிப்பாளராக உள்ளார்.
நிறைவான வாழ்க்கை
தர்மபுரி மாவட்ட கிராமங்கள்ல என் ஆரம்பகால பணி; அதுவும், தனியொரு செவிலியா இரவு நேரப் பணி. 'என் வீட்டுக்காரர் போதையில இருக்குறாருக்கா; வலி வந்திருச்சு... அதான், நானே நடந்து வந்துட்டேன்'னு பிரசவ வேதனையோட ஒருத்தி; கடுமையான வலியோட மாட்டு வண்டியை தானே ஓட்டிட்டு வந்த இன்னொருத்தி!
கையில ஒத்த ரூபா கூட இல்லாம வந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசரம்; தலைமை மருத்துவமனையில அவளை சேர்த்துட்டு திரும்புறப்போ நள்ளிரவு 1:00 மணி. இப்படி, தனியொரு மனுஷியா நிறைய பேரை கரை சேர்த்திருக்கிறதை நினைக்கிறப்போ, 57 ஆண்டு கால வாழ்க்கை திருப்திகரமா இருக்கு!
உயிருக்கும் மனசுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா சிஸ்டர்?
விஷம் குடிச்சுட்டு வர்றவங்கள்ல நிறைய பேரை காப்பாத்தி இருக்கோம். ஆனா, தொண்டையில குழாய் விட்டு விஷத்தை வெளியே எடுக்குறப்போ, 'எனக்கு வாழ விருப்பமில்லை'ன்னு சில கண்கள் பேசும் பாருங்க... சத்தியமா சொல்றேன்... மனசுக்கும் உயிருக்கும் தொடர்பிருக்கு!
தலைகுனிவு
இப்ப நான் இருக்குற மருத்துவமனையில, மது போதைகளால ஏற்படுற விபத்துகள்ல பாதிக்கப்பட்டு வர்றவங்க அதிகம்; பெரும்பாலும் 20 - 25 வயசு பசங்க! 'உங்க பையன் குடிச்சுட்டு வண்டி ஓட்டியிருக்கான்'னு சொல்றப்போ பெத்தவங்க தலைகுனிஞ்சு நிற்பாங்க; பரிதாபமா இருக்கும்!
'கொரோனா' ரொம்ப பயமுறுத்துதா?
'கொரோனா'வால மதுரை கர்ப்பிணி செவிலி இறந்தப்போ, உறவை இழந்த வருத்தம் எனக்கு! என் தலைமையில இயங்குற இளம் செவிலியர்களை என் வருத்தம் பாதிச்சிடக் கூடாதுன்னு என் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கிட்டேன். 'தொலைச்ச இடத்துலதான் தேடணும்'னு சொல்றமாதிரி, பயத்துக்கு நடுவுலதான் தைரியத்தை தேடுறோம்; தினமும் கண்டுபிடிக்கிறோம்.
சுருக்!
'முகக்கவசம் எதுக்கு'ன்னு கேட்குற மாமனிதர்களுக்கு கண்டிப்பா 'கொரோனா' பாடம் நடத்தும்!'
