PUBLISHED ON : ஜூன் 15, 2021

'இயற்கையே அதிசயம்தான்' எனினும் 'இயற்கையினுள் அரிதானவற்றையே அதிசயம்' என்கிறோம். விழுப்புரம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பார்வதி நாகராஜன் சராசரி பெண்தான் எனினும் அரிதானவற்றை பிறர் அறியும்படி செய்வதன் மூலம் அதிசயமாகிறார்.
படித்த கதை
ஆரம்ப கல்விக்கு அப்புறம் பக்கத்து ஊருக்குப் போய் படிக்க வீட்ல அனுமதிக்கலை. உண்ணாவிரதம் இருந்தும் பலனில்லை. பள்ளிக்குப் போய் எனக்கு நானே அட்மிஷன் கேட்டேன். விஷயம் தெரிஞ்சதும் அப்பாகிட்டே செம அடி. நான் படிக்க போயிட்டா அக்காவுக்கு வீட்ல வேலை கூடிடும்னு சொன்னாங்க. 'தினமும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் வயலுக்கு எரு உரம் போடுறது என் பொறுப்பு'ன்னு சொல்லி அப்பாவை சம்மதிக்க வைச்சேன்.
பிளஸ் 1 வந்ததும் திரும்பவும் உண்ணாவிரத போராட்டம்; ஆறு நாள் போராட்டம் அப்பா மனசை கரைச்சது. ஆனா, கல்லுாரிக்கு போக மட்டும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
கற்ற கதை
எங்களோடது மூலிகை வைத்தியம் பார்க்குற குடும்பம்! பாட்டிக்கும், அம்மாவுக்கும் மூலிகை பறிச்சு தர்றது மூலமா எனக்கும் அடிப்படை சிகிச்சைகள் தெரியும். பிச்சாண்டிகுளம் மூலிகை பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையத்துல பயிற்றுனரா வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் மூலிகைகளோட மகத்துவம் முழுமையா புரிஞ்சது; 'பாரம்பரிய அறிவை நாம வீணாக்கிட்டு இருக்குறோம்'ங்கிற குற்றவுணர்வு வந்தது; எனக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.
வளர்ந்த கதை
இந்த பூமி எல்லா உயிர்களுக்குமானது; அப்போ, இதுல வளர்ற மூலிகைகளும் எல்லா உயிர்களுக்குமானதுதானே! என் அருகாமையில உள்ள பெண்களுக்கு மூலிகைச் செடிகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்தினேன். என்னோட பயிற்சியால மூலிகை நர்சரி, மூலிகை அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள்னு நிறைய உருவாக்கினாங்க. நான் ரொம்பவே திருப்தியா உணர்ந்த தருணம் அது!
அதிசயமான கதை
பல்லுயிர் வளங்களை நீடித்த வகையில் பயன்படுத்துறதுக்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பா 2018ல விருது கிடைச்சது. பெங்களூர்ல இருக்குற பூமி கல்லுாரியில, 'சீனியர் பெலோஷிப்' கிடைச்சது பெரிய அடையாளம். மனித உரிமைகள் துறையில முதுகலை பட்டம் வாங்கினது கவுரவம். குடும்பம், குழந்தைகள்னு பொறுப்புகள் கூடிட்டே இருந்தாலும் சத்தீஸ்கர், டில்லி உள்பட பல இடங்களுக்கும் போய் மூலிகை வளர்ப்பு, பயன்பாடுகள் சார்ந்து இன்னும் பயிற்சி தந்துட்டுதான் இருக்குறேன்.
ஆசைகள் 1000
* பயணம் பண்ணிட்டே இருக்கணும்!
* அரிதான மூலிகைகளை கண்டறியணும்!
* இன்னும் நிறைய கத்துக்கணும்.
