PUBLISHED ON : ஜூன் 17, 2015

தினேஷின் அப்பா ரகுவரன், தனியார் பள்ளி ஆசிரியர். சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், தற்போது நிர்க்கதியாய் சென்னையில் இருக்கின்றனர், குடும்பத்தோடு. அப்படி என்ன தான் நடந்தது?
மணி இறந்துவிட்ட செய்தி கேட்டு, தினேஷ் அழவில்லை. அதற்கு மாறாக அவன் விளையாட மற்றொரு மணியை கேட்டான். மணி என்பது விளையாட்டுப் பொருளில்லை. தினேஷ் செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி.
மணியின் மரணம் தினேஷை பாதிக்கவில்லை. காரணம், மரணம் எவ்வளவு வலிமிகுந்தது என்பதை அறியும் வயதில்லை, தினேஷிற்கு. ஆனால் தினேஷ், மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவன்.
தினேஷ், ஆறு வயது சிறுவன். அவனின் ஆறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கீழே விழுந்துவிட்டான். அப்போது காலில் வலி ஏற்பட்டதால், அடுத்த நாள், அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர், தினேஷின் பெற்றோர்.
தினேஷின் உடல் வெளிறிப் போய் இருந்ததால், மருத்துவர் சில ரத்த பரிசோதனைகளை செய்யச் சொன்னார். அதன் முடிவில் தினேஷிற்கு ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருந்தன. மேலும் மண்ணீரல், கல்லீரல் மற்றும் நிணநீர் முடிச்சுகள் அளவில் பெரியதாக உள்ளதை கண்டறிந்தார்.
அவர், தினேஷை அருகிலுள்ள மருத்துவ கல்லூரி இணைந்த மருத்துவமனைக்கு அனுப்பினார். ஒரு வாரம், தினேஷ் அங்கிருந்தான். அப்போது மிகவும் வலியைத் தரக்கூடிய எலும்பு மஜ்ஜை பரிசோதனை செய்யப்பட்டது.
இறுதியில் 'லுக்கேமியா' எனப்படும் ரத்தப்புற்று இருப்பது தெரிந்தது. ரகுவரன் தம்பதியின், இதயத்தில் இடிவிழுந்தது போலாகிவிட்டது.
அப்போது தான் அவர்களுக்கே தெரியும், புற்றுநோய் குழந்தைகளையும் தாக்குமென்று. செல்லமாக வளர்த்த மணிக்கு, சோறு வைக்குமாறு பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, அந்த மாவட்டத்தில், அதற்குரிய சிகிச்சைகள் இல்லாததால், அவர்கள் கையிலிருந்த நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, தினேஷ் மற்றும் அவனது ஆறுமாத தங்கையுடன், பெற்றோர், சென்னைக்கு ரயிலேறி விட்டனர்.
தினேஷின் சிகிச்சைக்காக, கையிலிருந்த பணம் சிறுகச் சிறுக குறைந்தது. ரகுவரன் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே சென்றுவிட்டனர்.
பின் என்னைப் பற்றி கேள்விப்பட்டு என்னிடம் வந்தனர். தினேஷிற்கு 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திட்டத்தின் கீழ், இலவச தங்கும் வசதியுடன் கூடிய இடத்தில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினேஷிற்கு, மருத்துவர்கள் மற்றொரு நாய்க்குட்டியை பரிசளித்துள்ளனர், அவன் விளையாட.
கண்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துவதைவிட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துவோர் உண்டு. பணமும் அப்படித்தான்; இருப்பவர்கள் உதவ மறுக்கின்றனர். சில நல்ல உள்ளங்கள், 'ஆயிரத்தில் ஒருவன்' குழுவிற்கு, பண உதவி அளித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காக்க உதவுகின்றனர். நீங்களும் ஆயிரத்தில் ஒருவராகலாம்.
- ஜீலியஸ் சேவியர் ஸ்காட்,
குழந்தைகள் புற்று நிபுணர், சென்னை.
94882 86303
jxscott@hotmail.com
