PUBLISHED ON : ஜூன் 24, 2015

சம்பவத்தன்று, வழக்கம் போல் புறநோயாளிகளை கவனித்து முடிக்கவே, இரவு மணி, 11:00 ஆகி விட்டது. வீட்டிலிருந்து என் மனைவி, தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.
உள்நோயாளிகளை கவனிக்க சென்றேன். திவ்யா ராய், 12 வயது சிறுமி. அவள் அருகில் சென்றதும், புன்னகைத்து என் கைப்பிடித்து, 'டாக்டர் அங்கிள்! உட்காருங்கள்' என்று கூறினாள்.
அவளருகில் அமர்ந்ததும், சற்றும் தாமதிக்காமல், 'அங்கிள் என்னை காப்பாற்றுவீர்களா; எனக்கு சாக பிடிக்கவில்லை' என்று கூறினாள். 'நிச்சயமாக காப்பாற்றுகிறேன்' என்று கூறி, திவ்யாவை பரிசோதித்து விட்டு, வீடு செல்வதற்கு தயாரானேன்.
காரில் சென்றபோது, பாதி வழியில், திவ்யா சொன்ன வார்த்தைகள் என்னை இம்சித்தன. செவிப்பறையின், வழியே அவளது குரலும், வார்த்தைகளும் வந்து வந்து போயின.
சட்டென வீட்டுக்கு செல்லாமல் காரை மருத்துவமனைக்கு திருப்பினேன். என்ன ஆச்சரியம்! திவ்யாவிற்கு ஏதோ பிரச்னை என்று புரிந்தது. உடனே, அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றச் சொல்லிவிட்டு, சிகிச்சையளிக்க காத்திருந்த போது, திவ்யாவை இரண்டு நாட்களுக்கு முன், முதலில் சந்தித்த நிமிடம் நினைவு வந்தது.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், 2:00 மணிக்கு நோயாளிகளை எல்லாம் பார்த்து விட்டு, வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்து, கிளம்பிய வேளையில், 12 வயதுள்ள திவ்யாவை, அவரது தந்தை சித்தார்த் ராய், அசாமில் இருந்து அழைத்து வந்திருந்தார்.
திவ்யாவிற்கு அவளது சொந்த ஊரில் குடல் வாலுக்கான அறுவைச்சிகிச்சை நடந்துள்ளது. ஆனாலும், வலி தொடர்ந்து இருந்தது என, அவளது தந்தை கூறினார்.
பரிசோதனைகள் செய்தேன். அறுவைச்சிகிச்சைக்கு உட்பட்ட இடத்தில், ஒரு ஓரமாய் நோய்த்தொற்று இருந்தது. அதை சரிசெய்து, அங்கிருந்த சீழ்பிடித்த கெட்டநீர் வெளிவருவதற்காக, ஒரு குழாய் பொருத்தப்பட்டது. பின், சாதாரண நோயாளிகள் பிரிவுக்கு மாற்றினோம்.
அன்று இரவு, திவ்யாவை சந்திக்க சென்றபோது தான், 'என்னை காப்பாற்றுங்கள்' என்று கேட்டாள். வீட்டிற்கு செல்லாமல் திவ்யாவை சென்று பார்த்தபோது, அவளின் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே சென்றது. அவளது கண்ணில் ஏதோ ஒரு தேடுதலை கவனித்தேன்.
சற்றும் தாமதிக்காமல் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றச் சொன்னேன். அப்போது தான் கவனித்தேன். நாங்கள் பொருத்திய குழாயின் வழியே, தெளிந்த நீரோடை போல் தண்ணீர் வந்தது. அதை எடுத்து பரிசோதித்ததில் சிறுநீர் என்று தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை நிபுணரை அழைத்து சிகிச்சையை துவங்கினோம்.
திவ்யாவிற்கு சிறுநீர் வெளியேறும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்தோம். சிகிச்சைக்குப் பின் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது, தெய்வமும் குழந்தையும் ஒன்று என்று. அன்று திவ்யாவின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் இருந்திருந்தால், திவ்யா இன்று சந்தோஷப்பட்டிருக்க மாட்டாள். மீண்டும் மருத்துவமனைக்கு வரச் செய்த இறைவனுக்கு நன்றி. குழந்தைகளின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை, திவ்யாவின் மூலம் புரிந்து கொண்டேன்.
- ஜெ.கு.ரெட்டி,
குழந்தைகள் நல மருத்துவர்,
சென்னை.
9884212722
