PUBLISHED ON : மே 27, 2015

என் ஜூனியர் மாணவர் ஒருவர்தான், கிஷனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னிடம் அழைத்து வந்திருந்தார். கிஷன் வெளிநாட்டை சேர்ந்தவன்.
கிஷன், தன் மாமாவின் பாதுகாப்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்கிறான். கிஷனின் பிரச்னை தீர்க்கக் கூடியதா என்று கூட, மருத்துவர்கள் ஆராயவில்லை. அவனை சென்னையில் உள்ள, பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கின்றனர்.
கிஷனுக்கு உடலில் வியர்வை வெளியேறும்போது, கூடவே ரத்தமும் கலந்து வரும். அதுமட்டுமின்றி, காது, மூக்கு போன்ற உறுப்புகளில் இருந்து, உடல் முழுவதும் இதுபோன்ற விபரீத மாற்றம் ஏற்படும். உலகிலேயே மிகவும் அரிதான பிரச்னை இது. மேலும், உலகில் இதுபோன்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும், இரண்டாவது நபர், கிஷன்.
சென்னையில், கிஷனுக்கு சிகிச்சை அளித்த பிரபலமான மருத்துவமனைக்கே, இந்த பிரச்னை சவாலாகத்தான் இருந்தது.
அந்த நேரத்தில் தான், கிஷன் என்னிடம் அழைத்து வரப்பட்டான். அவனை சந்தித்த உடன், தெரிந்து விட்டது, அவனது வயது, 15க்குள் தான் இருக்க வேண்டும் என்று.
கிஷனை பார்த்ததும், என் இதயத்துடிப்பு அதிகமானது. காரணம், காது, மூக்கு வழியாக ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. கைகளில் திட்டுதிட்டாய் ரத்தம் வந்தது. கிஷனின் மாமா, 'எட்டுமாத காலமாய் குழந்தை இவ்வாறு சிரமப்படுகிறான்' என்றார். தீவிரமான மன அழுத்ததினால் மட்டுமே இது போன்ற விபரிதம் ஏற்படும். எனவே, கிஷனின் மாமாவை அழைத்து தனியே பேசினேன். எனக்கு கிஷன் மருத்துவ குறிப்புகள் மட்டுமல்ல, குடும்ப பின்னணியும் தேவை என்றேன். உடனே, அவர் கண்களில் கண்ணீர் திரள, என்னைப் பார்த்து அழுதார். கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டேனோ என்று நினைக்கையில், கிஷனின் மாமா தொடர்ந்தார்:
நாங்கள் வெளிநாடு ஒன்றில் வாழ்கிறோம். சில மாதங்களுக்கு முன், அந்த நாட்டு ராணுவம், கிஷனின் தாய், சகோதரி இருவரையும் இரக்கமில்லாமல், அவனது கண்முன்னாலேயே, பாலியல் பலாத்காரம் செய்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும், சுட்டுக் கொன்று விட்டனர்
இவ்வாறு, அவர் கூறிவிட்டு கதறி அழுதார்.
நினைத்துப் பார்க்கவே பெரும் மனவேதனையாக இருந்தது. கிஷனின் பிரச்னைக்கு காரணம் தெரிந்து விட்டது. எப்படி சரிசெய்வது இந்த பிரச்னையை என்று தீவிரமாக யோசித்தேன். சில பரிசோதனைகள் செய்தேன். கிஷனுக்கு சிகிச்சையை விட ஆலோசனை தான் அவசியம். அதுதான் அவனுக்கான சிகிச்சை என்று உணர்ந்தேன்.
காரணம், கிஷன், தீவிரமான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறான். மன அழுத்தம் அதிகமாகும் போதெல்லாம், வியர்வை நாளங்களில் உள்ள ரத்த குழாய்கள் வெடித்து வியர்வையோடு ரத்தமும் வருகிறது. இது தீவிரமான மனஅழுத்தம் என்பதால், மனநல நிபுணரான என் நண்பரும், நானும் சேர்ந்து, கிஷனுக்கு சிகிச்சை அளித்தோம்.
கிஷனின் அறிவுத்திறன் மற்றும் மூளையின் செயல் நினைவாற்றல் நன்றாக இருந்தது. எனவே, சிகிச்சைக்கு கைமேல் பலன் அளித்தது. ஆறு மாதங்களில் கிஷன் சரியாகிவிட்டான். இப்போது மாமா வீட்டில் இருந்தபடியே, பிளஸ் 1 படிக்கிறான்.
- ரவி சாமுவேல்,
மனநல ஆலோசகர்
போன்: 94440 22054

