
'108' அவசர எண்ணைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதை போலவே, '104' என்ற ஒரு சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. இலவச 24 மணிநேர உதவி மையம். இந்த மையத்தில் மூன்று விதமான சேவை வழங்குகின்றனர். இது, சென்னை திருவல்லிகேணி கஸ்தூரி பாய் காந்தி அரசினர் தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது.
தகவல்கள்
* நோய்கள், சிகிச்சைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும், அந்த மையத்தில், 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
* திடீர் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் போது, '104' எண்ணைத் தொடர்பு கொண்டால், போதிய வழிகாட்டல் கிடைக்கும்.
* கர்ப்பகால பிரச்னை, சிறிய தீக்காயம், சிறு காயங்கள் என, பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு முதல் உதவி செய்ய வழிகாட்டுவர்.
* சிறு பிரச்னைகளாக இருந்தால், என்ன சிகிச்சை செய்யலாம் என்றும் தகவல் அளிக்கின்றனர்.
* ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்ற அனைத்து தகவல்களையும், சம்பந்தப்பட்ட மருத்துவ பிரிவுகள் குறித்த தகவல்களையும் அளிப்பர்.
ஆலோசனை
* குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, பல், நரம்பு, தோல், கண், முடி, வயிறு, தலைவலி, பிரசவம் என, எல்லா துறை சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கமும், அறிவுரையும் வழங்கப்படுகிறது.
* கர்ப்பிணிகள், இந்த சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
* உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
* பெண்கள் உடல்நல கோளாறுகள் மற்றும் பாலியல் சந்தேகங்கள் என, அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவமனை செல்வதற்கு முன் இங்கு தொடர்பு கொண்டால் போதும் எளிதில் தீர்வு கிடைக்கும்.
புகார்
* அரசு மருத்துவமனை தொடர்பான அனைத்து புகார்களையும் இங்கு தெரிவிக்கலாம்.
* மருத்துவர் இல்லை; மருந்து இல்லை; பணியாளர்கள் இல்லை. இதுபோன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
* 104 க்கு அழைத்தால் முதலில் பதிவு அலுவலர் உங்களை வரவேற்று உங்கள் பெயர், முகவரி போன்ற தகவல்களை உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, பதிவு எண்ணை அளித்து மருத்துவ ஆலோசனை அதிகாரியிடம் உங்கள் அழைப்பு இணைக்கப்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது.

