PUBLISHED ON : மே 24, 2015
காலையில் எழுந்திருந்தால், சற்று நேர நடை, பின், வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க வேண்டும் என்று எண்ணி, தங்களுக்கு பிடித்தமான கடைகளுக்கு சென்று வாங்கி விடுவர். இப்போது, உழவர் சந்தை வந்து விட்டதால், நிலையை எளிதாகி விட்டது. ஆனால், சந்தைகளில் கிடைக்காத காய் ஒன்று உள்ளது. அது தான் கண்டங்கத்திரி.
கத்தரிக்காய் பற்றி எல்லோருக்கும் தெரியும். கண்டங்கத்திரி பற்றி பலருக்கு தெரியாது. கண்டங்கத்திரி, கத்திரிக்காயை விட சிறியதாகவும் சுண்டக்காயை விட பெரியதாகவும் இருக்கும். காட்டு பகுதியில் வளரக்கூடியதாகும். இக்காய், உணவுக்கு பயன்படுவதில்லை. மருத்துக்கு மட்டுமே பயன்படுகிறது.
கண்டங்கத்தரிக்கு, கண்டகாரி, முள்ளிக்காய் என்ற வேறு பெயர்களும் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து தசமூலம் என்பதாகும். இது, பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்று.
கண்டங்கத்திரி இலையை இடித்து, சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதை, உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசி வந்தால் உடல் நாற்றம் நீங்கும்.
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து பூசினால் தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்கள் நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு, இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆலிவ் எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவந்தால் மறையும்.
கண்டங்கத்திரி பூவை சேகரித்து நெய்யுடன் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசினால் நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும்; பசியை தூண்டும்.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து, குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும், கண்டங்கத்திரி பழத்தின் விதைகள்
பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இப்புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும். நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்த தொல்லை மறையும்.

