PUBLISHED ON : ஜூன் 03, 2015

கிஷோரின் தந்தை, சிறுவயதிலேயே அவனுக்கு ஏற்பட்ட நிலையை கண்டு வருந்த ஆரம்பித்தார். காரணம், கிஷோருக்கு, 'டைப் - 1' நீரிழிவு எனப்படும், முதல் வகை நீரிழிவு நோய் இருந்தது. கிஷோரின் வயது, வெறும், 11 மாதங்கள் தான். அந்த குழந்தைக்கு, எதிர்காலத்தில் என்ன பிரச்னையை இந்த நோய் ஏற்படுத்துமோ என, கிஷோரின் பெற்றோர் பயப்பட துவங்கினர்.
எனவே, மருத்துவமனைகளுக்கு சென்று பல மருத்துவர்களை சந்தித்து தீர்வு கிடைக்குமா என்று கேட்டு, ஏங்க ஆரம்பித்து விட்டனர்.
எந்த உணவையும், பெற்ற பிள்ளைக்கு ஆசையாக ஊட்டிவிட்டு சந்தோஷப்பட முடியவில்லை. மாறாக, கிஷோருக்கு உணவளிக்கும் போதெல்லாம் பயந்து கொண்டே ஊட்டிவிடுவர்.
சென்னை அரசு மருத்துவமனையில் பார்த்து கூட சரியாகவில்லை.
அப்போது தான், நீரிழிவு நிபுணரான என்னைப் பற்றி கேள்விப்பட்டு, என்னிடம் அவனை அழைத்து வந்திருந்தனர்.
குழந்தையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. காரணம், குழந்தை ஆழ்நிலை மயக்கத்தில், கிட்டத்தட்ட, 'கோமா' நிலையில், உணர்வற்று கிடந்தான். அப்போது, அவனுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகபட்சமாக, 600 இருந்தது.
உடனே, இன்சுலினை அவனுக்கு செலுத்தி சிகிச்சையை துவங்கினேன். காலை 11:00 மணிக்கு, என்னிடம் 'கோமா' நிலையில் அழைத்து வரப்பட்ட குழந்தை, மாலை 4:00 மணிக்கு எழுந்து விளையாட துவங்கி விட்டான்.
'டைப் - 1' நீரிழிவு என்பது, உடலில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது, அல்லது, சுரக்கும் இன்சுலின், பற்றாக்குறையாக இருப்பது. பொதுவாக, சாப்பிடுவதற்கு முன், 80 சதவீதம் முதல் 100; சாப்பிட்ட பின் 120 முதல் 140 என, சர்க்கரை அளவு இருக்க வேண்டும்.
கிஷோருக்கு, இன்சுலின் பற்றாக்குறை இருந்தது. எனவே, அவனுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்க அறிவுறுத்தினேன். தாய்ப்பாலில் சர்க்கரை குறைவாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, தாய்ப்பாலில் இன்சுலினும் சேர்ந்தே இருக்கும்.
பின் தினமும் காலை, மாலை, 4 யூனிட் இன்சுலின், கிஷோருக்கு செலுத்தினேன். பின், மூன்று மாதங்கள் கழித்து, தாய்ப்பாலோடு வேக வைத்த காய்கறிகளை கொடுக்க சொன்னேன்.
இன்சுலின் அளவு கட்டுப்பாட்டிற்கு வந்தது. சிகிச்சை அளித்து வந்த இன்சுலினை நிறுத்திவிட்டு, உணவு முறைகளை மாற்றி, குழந்தை செய்யும்படியான சில உடற்பயிற்சிகளை, கிஷோரின் அம்மாவிற்கு சொல்லி கொடுத்து, குழந்தைக்கு பயிற்சி அளிக்குமாறு சொன்னேன்.
ஆச்சரியம்! கிஷோருக்கு நீரிழிவு நோய் சரியாகிவிட்டது. கிஷோரின் பெற்றோருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி; எனக்கும் கூட.
- எஸ்.எம்.ராஜேந்திரன்,
பொதுநலம் மற்றும் நீரிழிவு நிபுணர்
பேராசிரியர் மற்றும் நீரிழிவு துறை இயக்குனர்.
சென்னை மருத்துவ கல்லுாரி
மற்றும் மருத்துவமனை, (எஸ்.ஆர்.எம்., குழுமம்)
திருச்சி. 98941 18899

