PUBLISHED ON : ஜூன் 03, 2015

அறியாமை, தெரியாமை என பல உண்டு. ஒரு நபரால், அனைத்தையும் தெரிந்திருக்க, புரிந்திருக்க சாத்தியமில்லை. முதலில் ஒன்றை தெரிந்து, புரிந்து, அதற்கு அடுத்ததாகத்தான் அறிய முடியும்.
பலவற்றை தெரிந்து கொள்கிறோம்; அவற்றில் நமக்கு தேவையானவற்றை புரிந்து கொள்ளவும் முயல்கிறோம்; இப்படியாக ஒன்றை அறிகிறோம். ஒன்றை முழுவதும் அறிந்து கொண்டால் தான், எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக செய்ய முடியும்.
தெரிந்து கொள்வதற்காக நாம் முயல்வதில்லை. தெரிந்ததை புரிந்து கொள்ள முயல்கிறோம். புரிந்ததைக் கொண்டு செயல்பட துவங்குகிறோம். அதனளவில் நமக்கு வெற்றி கிடைக்கிறது. மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். அது தொடரும் போது பாராட்டை பெற முடிகிறது.
பொதுவாக நாம், ஒருவருக்கு ஒரு செய்தி அல்லது விஷயம் தெரியாத போது, நாம் அதை சகித்துக் கொள்வதில்லை, கோபப்படுகிறோம். புரியாத போது வருந்துகிறோம்.
ஆனால் அறியாத போது விட்டுவிடுகிறோம். சமாதானமாகி ஏற்றுக் கொள்கிறோம். அதை நாகரிகம் என்று சமாளிக்கிறோம். இதனால் பல சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்.
அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தெரிந்ததை ஓரளவிற்காவது புரிந்து கொள்வது அவசியம். செய்வது எதையும் முழுக்க அறிந்து தான் செயய்ய வேண்டும். இது அத்தியாவசியமானது. தெரியாமல் செய்வதற்கு மன்னிப்புண்டு. ஆனால் அறியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு கிடையாது. அறியாமையை சகித்துக் கொள்ளாதீர்கள்; அப்போது சங்கடத்திற்கு வாய்ப்பில்லை.
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளினிக், சென்னை.
94440 34647

