PUBLISHED ON : ஜூன் 03, 2015

1கோடையில் உடல் வெப்பம் அடைவது ஏன்; அதன் அறிகுறி என்ன?
உடல் சூடு அதிகம் உள்ளோருக்கு, வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சூடு மேலும் அதிகரிக்கும். இதனால், வயிறு இழுத்து பிடித்தல், அடிவயிறு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள் தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், எரிச்சல், சிவந்து போதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
2கோடைக் காலத்தில், உடலில் நீர் வறள்வது ஏன்?
அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்னை வருகிறது. நீரிழப்பு ஏற்படும் போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராதவர்களுக்கு கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும்.
3 அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
குறு மயக்கம் மற்றும் ஆழ்நிலை மயக்கம், வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சிறுநீரை அடக்கி வைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி, தொற்று ஏற்பட்டு சிறுநீர் பாதையில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.
4 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட காரணம் என்ன?
நீர்ச்சத்து, உடலில் சரியான அளவில் இருந்தால் தான், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது, 'சன் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது.
5கோடைக் காலத்தில், வயிற்றுப் போக்கு அதிகமாக ஏற்பட காரணம் என்ன?
ஓட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு, வெப்ப சூழலில் அடிக்கடி உணவு நஞ்சாகும் வாய்ப்புகள் அதிகம். அதனால், வயிற்றுப் போக்கால் அதிகம்
அவதிப்பட நேரிடும்.
6 சுகாதாரமற்ற தண்ணீரால் தான் 'டைபாய்டு' காய்ச்சல் வருகிறதா? அது கோடையில் பரவும் நோய் தானா?
கோடைக் காலத்தில் அந்த காய்ச்சலின் தாக்கம், அதிகமாக இருக்கும். தண்ணீர் மூலம் பரவும்
நோய் என்பதால், சற்று தீவிரமாக இருக்கும். அதற்கு வெளி உணவுகளை உண்ணாமல், வீட்டில் தயாரித்த உணவுகளை உண்டாலே போதும். சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றை தவிர்த்தாலே அந்த காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.
7கோடையிலிருந்து தப்பிக்க, வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கின்றனர். அந்த வகை தகடுகளால், புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாமே?
ஆஸ்பெஸ்டாஸ் கூரை, சூரிய வெப்பத்தை அப்படியே உள்வாங்கி அனுப்பும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை விட, அந்த கூரை பல மடங்கு பாதிப்புகளை உருவாக்கும். ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால், புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது. உலகில் பல நாடுகள், அந்த தகடுகளை தடை செய்துள்ளன.
8 நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தண்ணீர் மட்டுமல்லாமல், சூப், பழச்சாறு, மோர், இளநீர், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய், பழங்களை அதிகமாக சாப்பிடலாம். முக்கியமாக தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை சாறுகள் அதிகமாக குடிக்கலாம். வாரம் இருமுறை, எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளலாம்.
9கோடையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
கோடைக் காலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது; ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தவும் கூடாது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். 'டின்'களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
10கோடையில் வெளியில் செல்லும்போது, என்னென்ன பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்?
வெளியில் செல்லும்முன், 'சன்ஸ் கிரீம் லோஷனை,' அரைமணி நேரத்திற்கு முன்பே தடவி செல்லுங்கள். புறப்படும் நேரத்தில், தடவி சென்றால் அது பயனளிக்காது. கண்டிப்பாக கைப்பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். கையில் எந்த நேரமும் குடை இருக்கட்டும். கூடுமான வரை, மாலையில் வெளியில் செல்வதாக இருந்தால், மிகவும் நல்லது.
- சுரேந்திர குமார்,
பொதுநல மருத்துவர்
சென்னை
dr.surendar84@yahoo.com

