PUBLISHED ON : ஆக 25, 2024

குழந்தைகளை தாக்கும் நோய்களில், 'ருமட்டாய் ஆர்த்ரைடீஸ்' முதலிடத்திலும், 'கவசாகி' நோய் அடுத்த இடத்திலும் உள்ளது. இந்நோயை உறுதிசெய்ய எவ்வித பரிசோதனைகளும் இல்லை. அறிகுறிகளை வைத்தே சிகிச்சை தரப்படும்.
கவசாகி நோய் என்பது சிறிய, நடுத்தர அளவுடைய ரத்தக் குழாய்களில் அழற்சியை ஏற்படுத்தும், சில சமயங்களில் நிணநீர் குழாய்கள், வாய், மூக்கு, தொண்டையில் உள்ள பிசுபிசுப்பான மியூக்கஸ் அடுக்கிலும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். கைக்குழந்தைகள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.
கவசாகி நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆட்டோ இம்யூன் டிசாடர் எனப்படும் நம் நோய் எதிர்ப்பு சக்தியால் உண்டாகும் பிரச்னையாக இருக்கலாம். நோய்க்கிருமிகளின் தாக்கத்தினாலும் ஏற்படலாம். எந்தவிதமான நோய்க்கிருமி கவசாகி உண்டாகக் காரணம் என்பதும் தெரியவில்லை. இது தொற்றுநோய் இல்லை.
5 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலுடன், கண்களில் அழற்சி, நாக்கு ஸ்ட்ராபெர்ரி நிறத்திற்கு மாறுவது, தொண்டை சிவத்தல், உதடுகளில் சிவந்து, வெடிப்பு, கைகள், பாதங்களில் வீக்கம், தோல் அழற்சி இருப்பது கவசாகியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
கவசாகி நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தொண்டைப்புண் என்று நினைத்து, பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள், தட்டம்மைக்கான சிகிச்சைகள் தரப்படுகிறது.
கவசாகி நோயினால் ஏற்பட்ட காய்ச்சல் ஒன்றிரண்டு வாரங்கள் கழித்து சரியானாலும், மருந்தினால் காய்ச்சல் சரியாகிவிட்டது என்று தவறாக நினைத்து விடுகின்றனர். கவசாகி நோய் தாக்கியதே தெரிவதில்லை.
இதனால், நோய் பாதித்தவர்களில், 25 சதவீதம் பேருக்கு, இரண்டு - மூன்று வாரங்களில், இதயத் தமனிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர, கை, கால் விரல்களில் தோல் உரியலாம். நுண்ணுயிரித் தொற்று அற்ற மூளை மென்சவ்வழற்சி, கல்லீரல், மூட்டுகளில் அழற்சியும் ஏற்படலாம்.
கவசாகி நோய் உறுதியான 10 நாட்களுக்குள், 'ஐவிஜி' எனப்படும் 'இம்யூனோ குளோபலின்' என்ற உயிரி மருந்தை நரம்பு வழியாக செலுத்தினால், இதயத் தமனியில் எற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.
அதனுடன், ஆஸ்பிரின் மருந்தும் கொடுக்கப்படும். மருத்து கொடுத்த சில மணி நேரங்களில், காய்ச்சல் சரியாகிவிடும். 'ஐவிஜி' கொடுத்த 36 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால், கவசாகி நோய்க்கிருமிகள் இந்த மருந்தை எதிர்க்கும் திறனை பெற்றுவிடும்.
இவர்களுக்கு இதயத்தமனி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு பிரத்யேக மருந்துகள் தரப்பட வேண்டும்.
இதயத் தமனிகளில் பாதிப்பை உறுதி செய்ய எக்கோ பரிசோதனை செய்யலாம். இயல்பாக இருந்தால், இரண்டாவது வாரத்தில் ஒருமுறையும், ஆறு - எட்டு வாரத்தில் ஒருமுறையும் எக்கோ பரிசோதனை அவசியம்.
இதயத் தமனியில் தீவிர அழற்சி இருந்தால், பல்வேறு இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், தொடர் மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
கவசாகி நோயை ஆரம்ப அறிகுறிகள் வாயிலாக கண்டறிந்து, சிகிச்சை செய்தால், இதயத் தமனியில் அழற்சி போன்ற தீவிர பாதிப்புகளை தடுக்க முடியும்.
டாக்டர் எம். ஜெயராஜ் ஜீவா, குழந்தை நல மருத்துவர், இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி, புதுச்சேரி. & 87785 33123 ) jeyaraj.jeeva@gmail.com