PUBLISHED ON : ஜூன் 10, 2015

பாஸ்கர் ஒரு பெரிய கணினி மென்பொருள் அலுவலகத்தில், உயர்ந்த பதவியில் இருப்பவர். மேஜை மேலிருந்த தன் திருமண அழைப்பிதழை பார்த்தபோது, பாஸ்கரின் மனம் இறுகியது. காரணம், திருமணத்தின் மேல் உள்ள பயத்தால் அல்ல; தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைவு தந்த பயம் அது.
தனக்கு இருக்கும் வியாதியின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற மனக்கலக்கம் வந்துவிட்டது. இந்த விஷயம், பெண் வீட்டாருக்கோ அல்லது பெண்ணுக்கோ தெரிந்தால், திருமணத்தை நிறுத்திவிடுவரோ என்ற பயம், நாளுக்கு நாள் பாஸ்கருக்கு அதிகமாயிற்று.
கடந்த சில மாதங்களுக்கு முன், நண்பர்களோடு சுற்றுலா சென்றவர்,
ஓட்டலில் தங்கியிருந்தபோது, அங்கு கொடுத்த துண்டு, போர்வை போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறார். அடுத்த நாள் இரவிலிருந்து, உடலில் சில இடங்கள் மட்டும் அரிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஏதாவது பூச்சி கடித்திருக்கும் என்று விட்டுவிட்டார். ஆனால், சில நாட்களில் நமைச்சல் அதிகமாகி, உடல் முழுதும் வட்ட வட்டமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையில், திருமணம் வேறு நிச்சயமானதால், பொது மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற்றார். மருந்துகள் மற்றும் களிம்புகள் தடவியும் தீர்வு இல்லை.
திருமண நாள் நெருங்கிவிட்டது; திருமணமும் முடிந்துவிட்டது. ஆனால், தனக்கிருந்த தோல் வியாதி, மனைவிக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், மனைவியிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தார்.
பாஸ்கரின் பிரச்னையை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட அவரின் மனைவி நிஷா, என்னிடம் அழைத்து
வந்தார். பாஸ்கரோ, மனைவியிடம் தன் பிரச்னையை சொல்லாமலேயே திருமணம் செய்தது குறித்து,
குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்திருந்தார்.
பரிசோதித்து பார்த்ததில், பாஸ்கரின் பிரச்னை தீர்க்கக் கூடியதே என்று தெரிந்தது. அவரின் பிரச்னை படர்தாமரை. சுற்றுலா சென்ற இடத்தில், யாரோ பயன்படுத்திய துண்டை பகிர்ந்து பயன்படுத்தியதால், இவருக்கும் தொற்றிக் கொண்டது. படர்தாமரை, பூஞ்சையால் ஏற்படும். பிறப்புறுப்பில் துவங்கி, தொடை இடுக்குகள் என்று, உடல் முழுவதும் பரவும்.
படர் தாமரை பரவிய இடம் கருமையடையும். இதை சொறிந்துவிட்டால் வெளியாகும் நீர்மத்தால், மற்ற பாகங்களுக்கு பரவும். படர்தாமரை தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தி, தலைமுடியை பாதிப்படையச் செய்யும். சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி, நமைச்சலை அதிகரிக்கும். இதை தடுக்க, தினசரி இருவேளை குளித்து, சலவை செய்த ஆடைகளையே அணிய வேண்டும்.
பாஸ்கர் சிகிச்சைக்குப் பின், நன்றாக குணமடைந்துவிட்டார். மாத்திரைகள் மற்றும் களிம்புகள் கொடுத்து, அவரது பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது, மகிழ்ச்சியாக தேன்நிலவு கொண்டாட்டத்தில் இருக்கிறார்.
- பிரபாகரன்,
சரும நிபுணர், சென்னை.

