PUBLISHED ON : ஜூன் 10, 2015

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.
ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் திறமைக்கு உட்பட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் லட்சியத்திற்கு ஏற்ப, திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. அந்த அளவிற்கு தயாராக இருந்தால், தோல்விக்கு வாய்ப்பே இல்லை.
எனவே தோல்வியை கொண்டாட தெரிய வேண்டும். தோல்விகளை அல்ல.
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. முன்னேற வேண்டும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஆசை; அதுவும் இயல்பு. உயர்வு வந்தால், தோல்வியும் வரும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில், ஒருமுறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால், அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பலமுறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான், அதை உண்மையில் உணர முடியும்.
தோல்வியை தெரிந்து, அதற்கு தயாரானால், தோல்விகளுக்கு வாய்ப்பில்லை. ஆகவே, தோல்வியை கொண்டாடுங்கள்.
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளினிக், சென்னை, 94440 34647

