உணவுக்காக பயன்படும் தாவரங்களில், மருத்துவப் பயனுள்ள தாவரமாக வாழை விளங்குகிறது. பல்வேறு உடல் நோய்களை போக்கும் இயற்கை உணவு மருந்தாக வாழை இலை, பூ, காய், பழம் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
வாழைப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் உடலுக்கு புத்துணர்வு தந்து வலிமை சேர்க்கிறது. வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு தன்மை இளமையாக இருக்க உதவுகிறது. தினமும் இரவு உணவுக்கு முன், ஒன்று அல்லது 2 பழம் சாப்பிடுவது, ஜீரணத்துக்கு சிறந்த மருந்து.
வாழைப்பழத்தில் உள்ள 'பெக்டின்', குடலில் அதிகம் உள்ள நீரை உறிஞ்சி உள் உறுப்புக்களை சீராக இயங்க செய்வதால், உணவு நன்றாக ஜீரணமாகி மலச்சிக்கல் நீங்க உதவுகிறது. மலச்சிக்கல் நீங்கினால் தோல் அரிப்பு போன்ற அலர்ஜி நோய் வராது.
20 சதம் மாவுச்சத்து: இரும்பு சத்து அதிகம் இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி, ரத்தசோகை நோயை குணமாக்குகிறது. அல்சர், சிறுநீரக நோய், உடல் பருமன், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு, இப்பழம் இயற்கை மருந்தாக உள்ளது.
மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி, புரூட் சாலட்டாக உட்கொள்ளலாம். வாழைக்காயில், 20 முதல் 25 சதவீதம் வரை மாவுச் சத்து உள்ளது. காய் பழுக்கும் போது, அது இனிப்பு சத்தாக மாறுகிறது. நன்றாக பழுக்காத வாழைப்பழத்தை சாப்பிட்டால் அஜீரணம் எற்படும். வாழைப்பழத்தில், பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்தவர்கள், இதை சாப்பிடக் கூடாது.
மாயமாகும் குடற்புழு: தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையை சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
காயங்கள், தோல் புண்கள் உள்ள இடங்களில், தேங்காய் எண்ணையை, துணியில் நனைத்து, புண் மேல் போட்டு, அவற்றின் மீது, மெல்லிய வாழை இலை யை கட்டு மாதிரி போட வேண்டும். சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம் பட்ட இடங்களில் பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். தொடர்ந்து செய்தால் குணமாகும்.
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்தசோகை போன்ற நோய்கள் உள்ளவர்கள், வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்.
இருமல் சரியாகும்: பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும். தொடர்ந்து, சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும். அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம், சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
தேனில், வாழைப் பழத்தைப் பிசைந்து, தினம் இரு வேளை வீதம் சாப்பிடுவது பலன் கொடுக்கும். மிளகை பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து, இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன், பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தாலும், இக்குறைபாடு நீங்கும். பொதுவாக, வாழைப்பழத்தை உணவுக்கு பின் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் எடுத்துக் கொள்வது பலன் தரும்.

