
பொருளாதார தேடலுக்காக, காலையில் இருந்து மாலை வரை ஓயாமல், காலடி சுவட்டின் ஓசை காதில் கேட்க பறந்து கொண்டே இருக்கிறோம். காலை எழுந்திருக்கும் போதே, அடுத்தடுத்த வேலைகள் என்ன செய்ய வேண்டும் என்று மனதில் கணக்கு போட ஆரம்பித்து விடுவோம்.
இப்படி மனம், மூளை, உடம்பு என, எதற்குமே ஓய்வு என்பதை மறுத்து தினமும் ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம். தினசரி, எட்டு மணிநேர வேலைக்கு பின்பு, யோசிக்கும் மனநிலையை சற்று தூரம் தள்ளி வைத்து விடுவது அவசியம். அப்போதே நம் மனதிலுள்ள படபடப்பு, தேவையற்ற உணர்ச்சிகள் நீங்கி சாதாரண நிலைக்கு வரும். அடுத்து, வீட்டுக்கு செல்லும் போது, தலைமீது ஏறி சிங்காரமாய் அமர்ந்திருக்கும், டென்சனை விட்டு தள்ளி,
முக மலர்ச்சியுடன் உள்ளே செல்ல வேண்டும்.
உடல் உழைப்புக்கு ஏற்றவாறு, ஆரோக்கியமான உணவு முறைகளை நாம் பின்பற்றுவது அவசியம். தேநீர் குடிப்பதால், மனம், மூளை சுறுசுறுப்படையும் என ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. வீட்டில் போடும் சூடான டீயை அனைவரும் சேர்ந்து பருகுங்கள். அதன் ஒவ்வொரு துளியிலும், ருசியை மனதார உள்வாங்கி குடியுங்கள். அதன் துளிகள் உடலுக்குள் செல்லும் போது, உடம்புக்கு சுறுசுறுப்பை தரக்கூடிய நரம்புகள் புத்துணர்வடைய வைக்கிறது.
இதனால், மூளை, மனம் மறுமலர்ச்சி பெறும்.
இப்படி மறுமலர்ச்சி அடையும் போது, அடுத்த நாட்களுக்கான வேலைகள் எளிதாக முடிய வாய்ப்புள்ளது. தினமும், நம்மை புதுப்பித்து கொண்டே இருக்க, தேநீர் சிறந்த பானம். தற்போது, குடிக்கும் தேநீரிலும் கலப்படங்கள் இருக்கின்றன. இதனால், தினமும் தேநீர் குடிக்கும் போது, உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தேநீர் பருகுபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சிறந்த தரமான டீத்தூளை வாங்கி உபயோகியுங்கள். டீயுடன், இஞ்சி, ஏலக்காய் சிறிது சேர்த்து காயவைத்து குடித்தால் உடலுக்கு நல்லது. ஆகவே, ரிலாக்ஸ் ஆக தினமும் ஒரு கப் தேனீர் பருகுங்கள்; புத்துணர்வோடு வாழ்வை எதிர்
கொள்ளுங்கள். தேநீர் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் தேநீர் மட்டுமே. நீரழிவு மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் தேநீரில் அதிகம் உள்ளன. புற்றுநோய் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் தேயிலையில் இருக்கின்றன.
வழக்கமாக தேநீர் குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது
கண்டறியப்பட்டுள்ளது. கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை தேநீர் தடுக்கிறது.
குறிப்பாக, தோல், கல்லீரல், நுரையீரல், மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. ஆண்களுக்கு வரும் புராஸ்டேட் புற்றுநோயை தேநீர் தடுக்கிறது.

