PUBLISHED ON : ஜன 13, 2016

மாறனுக்கு வயது, 54; சொந்த ஊர் - புதுக்கோட்டை. விவசாயத்தையே தன் மூச்சாக நினைத்து வாழ்ந்து வருபவர். 'இரண்டு பிள்ளைகளை எப்படியோ பொறியியல் பட்டம் பெற வைத்து விட்டேன்; இனி கவலை இல்லை. குடும்ப பாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வர்' என்று இளைப்பாற நினைத்தபோது, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.சிறிது காலமாக, மாறன் சிறுநீர் கழித்த போதெல்லாம், அதில் ரத்தம் கலந்து வந்தது. சிறுநீர் கழிக்கவும் மிகவும் சிரமப்பட்டார். அருகிலுள்ள பொது மருத்துவரை அணுகியபோது, அவர்கள் என்னிடம் மாறனை அனுப்பி வைத்தனர். உழைத்து களைப்பாகிய உடம்பு என்பதை, பார்த்த உடனே புரிந்து கொண்டேன். அவரை சில மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொன்னேன்.
அதன் முடிவை பார்த்ததும், நான் சந்தேகப்பட்டது சரியே என்று, மருத்துவ மூளை சொல்லிவிட்டது. 'புராஸ்டேட்' சுரப்பி வளர்ச்சியடைந்து, வீக்கமடைந்து இருக்கிறது. இது, சிறுநீர் பையை ஒட்டியவாறு, சிறுநீர் பாதையின் அருகில் இருக்கும். அதனால்தான், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது, அடிக்கடி சிறுநீர் வரும் உணர்வு, சிறுநீர் வராமல் அடைப்பது போன்ற சிரமங்களை மாறன் சந்தித்திருக்கிறார். 'புராஸ்டேட்' சுரப்பியில், புற்றுநோய் அல்லாத சாதாரண கட்டி இருந்தது. 'டெஸ்டோஸ் ஸ்டீரோன்' எனும் ஹார்மோன் சுரப்பால் தான், 'புராஸ்டேட்' சுரப்பி வளர்ச்சியடைகிறது.
இப்பாதிப்பின் அறிகுறிகள், மனிதனுக்கு மனிதன் வேறுபடும். 'புராஸ்டேட்' சுரப்பியின் இயல்பு நிலை, 20 கிராம் முதல், 25 கிராம் வரையே. ஆனால், மாறனுக்கு அதன் வளர்ச்சி, 80 கிராமாக இருந்தது. எனவே, சிறுநீர் வெளியேற செயற்கை குழாய் பொருத்தினோம்.
அப்போதும், சிக்கல் தொடர்ந்தது. 'புராஸ்டேட்' சுரப்பியை அகற்றுவதே நல்லது என்பதால், மாறனுக்கு அறுவை சிகிச்சை மூலம்,
அச்சுரப்பியை அகற்றினோம்.'புராஸ்டேட்' சுரப்பியின் வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருந்தால், மருந்துகளே போதுமானது. கட்டியின் வளர்ச்சி, 60 கிராம் வரை இருந்தால், என்டோஸ்கோப்பி எனப்படும், நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், சிறுநீர் பாதையில் சிறிய கேமராவை செலுத்தி, அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம். இது ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும்.
முன் பெரிய அளவிலான, 'புராஸ்டேட்' கட்டிகளை நீக்க, 2 முதல், 3 மணி நேரம் வரை, திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்தனர். இது குணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படும். இப்போது, மருத்துவம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளதால், 'பைபோலார் ப்ளாஸ்மா எனர்ஜி' சிகிச்சை மூலம், 70 முதல், 100 கிராம் வரை உள்ள பெரிய கட்டிகளையும் அகற்ற முடிகிறது.
இதில் சிறப்பு அம்சமாக, ஒன்று முதல், ஒன்றரை மணி நேரத்திற்குள், இந்த அறுவை சிகிச்சை
முடிந்துவிடும். அறுவை சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளும் குறைவே.
இச்சிகிச்சையின் மூலம், மாறனுக்கு, 'புராஸ்டேட்' சுரப்பியை எடுத்து விட்டோம். தற்போது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதோடு, மீண்டும் விவசாயம் பார்க்கிறார். மாறனின் பிரச்னை தீர்ந்ததில், எனக்கு மகிழ்ச்சியே! ஆனால், மாறனைப் போல், 'புராஸ்டேட்' சுரப்பி பாதிப்பில் உள்ளவர்கள், இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர் என்பதே என் வருத்தம்.
தி. வாசுதேவன்,
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்.
புதுச்சேரி.
73732 02111
