PUBLISHED ON : மார் 15, 2015

முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். பலாப்பழத்தில் இனிய சுவை மட்டுமல்ல, அரிய வகை மருத்துவ குணமும் அடங்கியுள்ளது. அதில், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன.
இப்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. ஆனால் கொழுப்புக்கள் இல்லை. எனவே இப்பழத்தை அச்சமின்றி, ரசித்து சாப்பிடலாம். இப்பழத்தில் அப்படி என்ன நன்மைகள் உள்ளன? இதோ அந்த நன்மைகள்.
மலச்சிக்கல்: பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். இதில், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடும், அழகாகவும் இருக்கும்.
புரோட்டீன்:பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் காலங்களில் தினமும் உட்கொண்டு வாருங்கள். இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம். பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலை நோய்கள் தாக்குவது குறையும்.
ஆற்றல்: பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. உடல் ஆற்றல் அதிகரிக்க, சிம்பிள் சர்க்கரையான ப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் உள்ளது. பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் இருப்பதால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
ரத்த அழுத்தம்: பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
குடல் புற்றுநோய்: பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அதை தடுக்கலாம். சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.
ரத்த சோகை: பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, நியாசின், வைட்டமின் பி6, மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை ரத்தம் உருவாக உதவும். இப்பழம் உடலில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி, ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும். பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும்.
ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.
