PUBLISHED ON : மார் 15, 2015

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதை ஒரு உணவாக மட்டுமே சுவைத்து பழகியவர்களுக்கு, இந்த தகவல் பயன் உள்ளது தான்.
பெயருக்கு ஏற்ப இனிப்பு சுவை உள்ள கிழங்கு இது. இந்த கிழங்கை சாதாரணமாக தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து, தோலை மட்டும் உரித்து அப்படியே சாப்பிடலாம். மிகவும் தித்திப்பாக இருக்கும். பசி தாங்க கூடியது. பல சத்துக்களும், மருத்துவ குணமும் அதில் உள்ளது. பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், வாயு தொல்லை தரக்கூடியது என்ற கருத்து உள்ளது.
ஒரு வகையில் அது உண்மை என்றாலும், எல்லா கிழங்குகளும் அவ்வாறு வாயு தொல்லையை தருவதில்லை. சிலரின் உடல் வாகைப் பொறுத்து, இப்பிரச்னை வருவதுண்டு. ஆனால், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அப்பிரச்னை இல்லை. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதயத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இதில் நிறைய ஸ்டார்ச் சத்தும், நோய் எதிர்ப்பும் உள்ளது. மாவுச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில், நிறைய ஊட்டச்சத்து உள்ளது. 100 கிராம் கிழங்கில், 70 முதல், 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.
மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. இதில், நிறைய நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளை விட இதில், அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை இயற்கை நோய் எதிர்ப்பு கொண்டதாகும்.
உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி, தேக ஆரோக்கியம் மற்றும் தோல் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும். நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற,
உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளன. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கை விட அதன் இலைகள், அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன. சக்கரை வள்ளிக்கிழங்கை மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவாக கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
