கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அழுத்தமான மனம்... அல்சரின் அறிகுறி!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அழுத்தமான மனம்... அல்சரின் அறிகுறி!
PUBLISHED ON : ஆக 05, 2018

வயிற்றுப் புண் எனப்படும், 'அல்சர்' இல்லாதவர்கள் குறைவு என்ற நிலை வந்து விட்டது. இரண்டு வகை அல்சர் உள்ளன. வயிறு ஆரம்பிக்கும் இடத்தில் வரும், 'பெப்டிக் அல்சர்' பொதுவானது. 'மியூக்கஸ்' எனப்படும் சவ்வில், அரிப்பு ஏற்படுவதால் இது வருகிறது. சாப்பிடும் உணவு, அமிலத்துடன் சேர்ந்து, மேல் நோக்கி வந்து, அரிப்பை ஏற்படுத்தும்; இதனால், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்னைகள் வரும்.
இரைப்பையில் ஏற்படும் அரிப்பால் ஏற்படுவது, 'டியோடினல் அல்சர்!'
ஒருவருக்கே இரண்டும் வரலாம்.
கெட்டுப் போன அல்லது புளித்த உணவை சாப்பிடுவதால், 'எச் - பைலோரை' என்ற பாக்டீரியா தொற்றே அல்சர் வர முக்கிய காரணம். இதுதவிர, கார்பனேடட் பானங்கள், குறிப்பிட்ட உடல் பிரச்னைகளுக்கு, நீண்ட நாட்களாக எடுத்துக் கொள்ளும் மருந்து அல்லது வலி நிவாரணி மாத்திரைகள், அல்சரை உண்டாக்கலாம். இவை எல்லாவற்றையும விட முக்கிய காரணம், 'ஸ்ட்ரெஸ்!'
டயட்
பால் பொருட்களை அதிகம் சாப்பிடக் கூடாது; காபி, டீ குடிக்க கூடாது; வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொரிக்க, வறுக்க பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, சமைத்த உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது, பிரிஜ்ஜில் பதப்படுத்தி, பல நாட்கள் பயன்படுத்துவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
காலையில் சமைத்த உணவை மதியம் சாப்பிடலாம்; அதையே சூடுபடுத்தி, இரவு வேளைக்கும் பயன்படுத்தக் கூடாது.
சமைக்காத வெங்காயம், பூண்டு, முட்டை கோஸ், புரோக்கோலி போன்ற, சல்பர் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடக் கூடாது; அமில சுரப்பை இது அதிகப்படுத்தும். இவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். சல்பர், குளூட்டாதியோனன், ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை அதிகம் சேர்க்க வல்லது.
கழிவுகளை வெளியேற்ற இது அவசியம். கழிவுகள் வெளியேறா விட்டால், முதலில் அல்சர், தொடர்ந்து கேன்சர் வரும்.
வயிறை பலப்படுத்த சல்பர் தேவை. வாழைக்காய், வாழைப்பழம் நிறைய சாப்பிடலாம். இதில் உள்ள பொட்டாஷியம், புண்ணை ஆற்ற உதவும். மோர் நிறைய குடிக்கலாம். கெட்ட பாக்டீரியாவை அழிப்பதற்கு உதவும். மோர் வேண்டாம் என்றால், தேங்காய் பால் குடிக்கலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, பைனாப்பிள் போன்றவை அமில சுரப்பை அதிகப்படுத்தும் என்று சொல்லி, தவிர்க்க சொல்வர். ஆனால், இயற்கை மருத்துவத்தில் இதை சேர்த்துக் கொள்ள சொல்வோம்.
காரணம், இதில் உள்ள வைட்டமின், 'சி' வயிற்றில் உள்ள புண் குணமாகும்.
நன்றாக நீரில் கலந்து, சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
அல்சர் இருப்பவர்கள் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது. மசாலா காரம் சேர்க்காமல், மிளகை அதிகம் சேர்க்க வேண்டும்.
பெப்டிக் அல்சரை மிளகு விரைவில் குணப்படுத்தும்; கேன்சர் வராமல் தடுக்கும்.
இதுதவிர, சீரகம், ஆளி விதை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்கலாம்.
டாக்டர் யோ.தீபா
இயற்கை மருத்துவர், அரசு சித்தா கல்லுாரி, சென்னை.
sakshaayaan@gmail.com
