கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - பிறவி இதய கோளாறுகள்... காரணங்கள்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - பிறவி இதய கோளாறுகள்... காரணங்கள்!
PUBLISHED ON : நவ 10, 2019

ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது, நம் சமூகத்தில் இருக்கும் பெரிய பிரச்னை. இதனால், மரபியல் காரணங்களால் வரும் இதய நோய்கள் உட்பட, பல உடல் கோளாறுகள் ஏற்படலாம்.
தற்போது, இந்த வழக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில், தாய்க்கு, 'ருபெல்லா' காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு இதய பாதிப்பு வரலாம்.
கர்ப்பிணி ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது, குழந்தையை பாதிக்கும். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை குழந்தைக்கு தர வேண்டும்; அதற்கு சிறந்த வழி தாய்ப்பால். இதைப் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம், நியூசிலாந்தை விட, கேரளாவில் குறைவு. பெண்களின் கல்வி அறிவு அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம்; மற்ற மாநிலங்களும், இதை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.
குழந்தைத் திருமணம் தடுப்பு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்பாதது போன்ற விஷயங்களிலும், கேரளா, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. கேரளாவில், 25 வயதிற்கு முன், பெண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை.
கரு உருவான மூன்று மாதங்களிலேயே, இதயம் உருவாகி விடும். அல்ட்ரா சவுண்டு, கருவின் இதயத்தை பரிசோதிக்கும், 'பீட்டல் எக்கோ கார்டியோகிராம்' போன்றவற்றின் உதவியுடன், இதய ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்.
சரி செய்ய முடியாத, சிக்கலான பிரச்னை இருப்பது தெரிந்தால், கருவிலேயே சரி செய்ய முடிந்தால் செய்யலாம் அல்லது கருவை கலைத்து விடலாம். 99 சதவீதம் இதய கோளாறுகளை சரி செய்து விட முடியும். இன்றும், 85 சதவீதம் பிரசவங்கள், மருத்துவமனையில் நடப்பதில்லை. இந்த பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதும்; ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
டாக்டர் கே.எம்.செரியன்,
இதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,
'பிரண்டியர் லைப் லைன்' சென்னை.
044 4201 7575
