கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - காரணம் தெரியாத வளர்ச்சி!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - காரணம் தெரியாத வளர்ச்சி!
PUBLISHED ON : ஆக 19, 2018

கேன்சர் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. பல விதங்களிலும் இது பற்றிய ஆராய்ச்சி, மருத்துவ அறிவியலில் புதுப்புது தொழில்நுட்பங்கள், மருந்துகள் என, வந்து கொண்டே இருக்கின்றன. அதனால், இது குறித்து, ஆழமாக வேரூன்றியிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் தேவையில்லை.
இது ஏன் வருகிறது என்ற கேள்விக்கு, இதுவரையிலும் உறுதியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை. நாம் அனைவரும், செல் வளர்ச்சிக்கு காரணமான, இரண்டு மரபணுக்களோடு பிறந்துள்ளோம்.
'புரோட்டோ ஆங்கோ' மரபணு, செல் வளர்ச்சியை துாண்டும்; 'டியூமர் சப்ரஸ்ட்' மரபணு, செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இது தான் இயல்பாக அனைவரது உடம்பிலும் நடக்கும் செயல்.
சில நேரங்களில், காரணமே இல்லாமல், செல் வளர்ச்சியை துாண்டும் மரபணு, கட்டுப்பாடு இல்லாமல் தன் வேலையை செய்வது, கட்டுப்படுத்தும் மரபணுவின் செயல்பாடு, இயல்பாக இல்லாமல் இருப்பது என, மரபணுக்களின் செயல்பாடுகள் மாறுபடுவதால், செல் வளர்ச்சியில் பிரச்னை ஏற்படுத்தும். இதுவே, கேன்சர் செல் வளர்வதற்கு காரணம்.
இது ஏன் என்று ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறது; அடுத்த சில ஆண்டுகளில், காரணம் தெரிய வரலாம்.
குழந்தைகளுக்கு வரும் கேன்சருக்கு பெற்றோரோ, குழந்தையோ காரணம் இல்லை; உணவு, விளையாடும் மின் சாதனப் பொருட்கள் என்று, எதையும் காரணமாக சொல்ல முடியவில்லை; குடும்பத்தில், ஒரு குழந்தைக்கு இருந்தால், அடுத்த குழந்தைக்கும் வரும் என்றும் கூற இயலாது.
பிறவியிலேயே வரும் நோய் அல்லது தொற்று வியாதியும் இது கிடையாது. ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே, மரபியல் காரணங்களால் குழந்தைகளுக்கு வருகிறது. குறிப்பிட்ட சில வகைகள் தான், மரபியல் காரணங்களால் வருகிறது.
சிகிச்சை கேன்சர் பாதித்த செல்களை அழிப்பதற்கு, கீமோ தெரபி, கதிரியக்க சிகிச்சை அல்லது பாதித்த பகுதியை அகற்ற, அறுவை சிகிச்சை உள்ளது. இது தவிர, எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், இம்மினோ தெரபி, கேன்சர் பாதித்த செல்களை மட்டும் அழிக்க, 'டார்கெட்டட்' செல் தெரபியும் உள்ளது.
எல்லா கேன்சருக்கும், எல்லா சிகிச்சையும் தேவைப்படாது. சிலருக்கு ஒன்று போதும்; சில குழந்தைகளுக்கு, சில வகைகளுக்கு மட்டும், ஒன்றுக்கு அதிகமான சிகிச்சை தேவைப்படலாம்.
எல்லா கேன்சர் பாதிப்பிலும், நான்கு நிலைகள் உள்ளன. முதல் அல்லது இரண்டாவது நிலையில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பது, 100 சதவீதம் உண்மை. ஆனால், 'லுகீமியா' எனப்படும், ரத்த புற்றுநோயை மட்டும், எந்த நிலை என்று வகைப்படுத்த இயலாது. காரணம், உடல் முழுவதும் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும்; ஆனாலும் குணப்படுத்த முடியும்.
அறிகுறிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாத தொடர் காய்ச்சல், மூக்கில், தோலில், ஈறுகளில் ரத்தக் கசிவு, அசாதாரண வீக்கம், கழுத்துப் பகுதி சுரப்பிகளில் வீக்கம், உடல் வலி, நடக்க முடியவில்லை இது போன்ற அறிகுறிகள் குழந்தைக்கு இருந்தால், பரிசோதனை செய்து, காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவையெல்லாம் கேன்சரின் அறிகுறிகளாக இருக்கலாம்; அவ்வளவு தான். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பயாப்சி செய்தால் காரணம் தெரிந்து விடும்.
முறையான சிகிச்சையால், முற்றிலும் இதை குணப்படுத்த முடியும்.
டாக்டர் ரம்யா உப்புலுரி,
குழந்தைகள் நல புற்றுநோய் நிபுணர், சென்னை.
ramya.december@gmail.com

