PUBLISHED ON : ஜன 10, 2021

புனேவில் இயங்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த, கொரோனாவிற்கு எதிரான, கோவிஷீல்டு தடுப்பு மருந்தை, அவசர காலத்தில் பயன்படுத்த, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு, அனுமதி அளித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து பற்றி, சீரம் அமைப்பின் செயல் அதிகாரி, ஆதர் புணவாலா தெரிவித்த தகவல்கள்:
கோவிஷீல்டு தடுப்பு மருந்து பற்றிய சரியான தகவல்கள் மக்களை சென்று சேரவில்லை. இந்த தடுப்பு மருந்தை, இரண்டு தவணைகளாக போட வேண்டும்.
முதல் முறை போடுவதற்கும், இரண்டாவது முறை போடுவதற்கும் இடையில், 3 மாத இடைவெளி இருக்க வேண்டும். போதுமான இடைவெளி இருந்தால் மட்டுமே, இந்த தடுப்பு மருந்து, 90 சதவீதம், கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு தரும்.
ஆக்ஸ்போர்டு மருத்துவ நிபுணர்கள் கொடுத்தது போன்று, முதல் முறை, 50 சதவீத மருந்து, மீதியை அடுத்த முறை என்று பாதி பாதியாக நாங்கள் தரப் போவதில்லை. முழு, 'டோஸ்' தருவதற்கு அனுமதி கிடைத்து உள்ளது.
'டிரையல்'
வெளி நோயாளியாகவே வந்து, தடுப்பு மருந்தை போட்டு கொள்ளலாம்; மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பு மருந்து போடுவதால், கொரோனா தொற்று பாதிக்காது என்று சொல்ல முடியாது. தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களில், 30 - 40 சதவீதம் பேருக்கு தொற்று பாதிக்கிறது; ஆனால், பாதிப்பு லேசாக இருக்கிறது. மருத்துவ உதவி தேவைப்படவில்லை.
தடுப்பு மருந்து போட்டுக் கொண்டாலும், 40 சதவீதம் பேருக்கு பாதிப்பு வரலாம் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கவனம் அவசியம்.
