தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேன்சரை தடுக்கும் ஹார்மோன் தடை!

கேன்சரை தடுக்கும் ஹார்மோன் தடை!

கேன்சரை தடுக்கும் ஹார்மோன் தடை!


PUBLISHED ON : ஜன 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்பக கேன்சர் பாதிப்பு, கடந்த, 20 ஆண்டுகளில் அதிகரிக்க என்ன காரணம்?

இதற்கு முதல் காரணம், தாமத மாக திருமணம் செய்வது, 30 வயதிற்கு மேல் திருமணம் செய்யும் போது, அதிகபட்சம் இரண்டு குழந்தை மட்டுமே பெற்று கொள்கின்றனர்.

மூன்றாவது காரணம், தாய்ப்பால் கொடுப்பது குறைந்து விட்டது. முந்தைய தலைமுறை போல, அதிக குழந்தைகள் பெறுவது, மூன்று, நான்கு வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கிடையாது.

கடந்த, 20 ஆண்டுகளாக, மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறி வருகிறோம். மது, சிகரெட் பழக்கம், பெண்களிடையே அதிகரித்து விட்டது. இவையெல்லாம் தான் மார்பக கேன்சர் அதிகரிக்க காரணம்.

எப்படி இவை காரணிகளாகும்?

'ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோன், வயதுக்கு வந்ததில் இருந்து, 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் முடியும் வரை சுரந்தபடியே இருக்கும்.

ஆனால், கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் பருவத்திலும் மட்டும் இந்த ஹார்மோன் சுரக்காது.

வயதிற்கு வந்தது முதல், மெனோபாஸ் வரை, 40 ஆண்டுகள் என்றால், நம் முந்தைய தலைமுறை, அதிக குழந்தைகள் பெற்றது, ஒவ்வொரு குழந்தைக்கும் நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுத்தது என, 15 ஆண்டுகளாவது, 'ஈஸ்ட்ரோஜன்' சுரப்பது தடைபடும்.

ஆனால், 20 ஆண்டுகளில், திருமண வயது அதிகரித்து, குழந்தை பெறுவது, தாய்ப்பால் கொடுப்பது குறைந்து விட்டதால், இந்த இடைவெளி, 5 ஆண்டுகள் கூட இல்லாமல், தொடர்ந்து, 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரந்தபடியே இருக்கிறது.

பெண்களின் இனப்பெருக்க வயதில் அவ்வப்போது, 'ஈஸ்ட்ரோஜன்' சுரப்பதில் தடை ஏற்பட வேண்டியது அவசியம். ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் தடை, மார்பக கேன்சர் வராமல் தடுக்கும்.

உணவு பழக்கம் எப்படி பாதிக்கும்?

அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகளையே சாப்பிடுகிறோம். தேவைக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும் போது, கொழுப்பில் இருந்தும், 'ஈஸ்ட்ரோஜன்' சுரக்கும். இரண்டு விதங்களில் ஹார்மோன் சுரக்கும் போது, கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

வேறு என்ன காரணிகள் உள்ளன?

மார்பக கேன்சர் வருவதற்கு இது தான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

5 - 10 சதவீதம் மட்டுமே, மரபியல் காரணிகளால் மார்பக கேன்சர் வரும். 90 சதவீதம் பேருக்கு, நான் சொன்ன காரணங்களால், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அறிகுறிகள்

நாற்பது வயதிற்கு மேல், மார்பகத்தில் கட்டி வந்தால், தாமதிக்காமல் பரிசோதிக்க வேண்டும்.

சில சமயம், மார்பக காம்பில் நீர் வடியும்; காம்பு உள்ளே போய் விடும். சிலருக்கு, மார்பகம் முழுதும், தோல் தடித்து, சிவந்து விடும்.

'எக்ஸ்ரே, பயாப்சி' எனப்படும் சதை பரிசோதனை, 'மேமோகிராம்' மூன்றும் செய்து தான், கேன்சர் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

கேன்சர் வரும் சாத்தியம் உள்ளவர்கள், 45 வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒருமுறை, 'மேமோகிராம்' செய்வது அவசியம்.

கேன்சர் சிகிச்சை எப்போது அவசியம்?

மார்பக கேன்சர் உறுதியானவுடன், சிகிச்சையை ஆரம்பித்து விட முடியாது. வேறு எங்காவது நோய் பரவி உள்ளதா, எந்த நிலையில் உள்ளது என்று பரிசோதித்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.

மார்பகத்தை அகற்ற வேண்டியது அவசியமா?

கேன்சர் பாதிப்பு, 'ஸ்டேஜ் - 1, 2' என்று இருந்தால், மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

கட்டி மற்றும் அதை சுற்றியுள்ள திசுக்களை அகற்றி விடுவோம்.

அக்குளில் உள்ள நெறி கட்டியில் ஒன்றை எடுத்து, பரிசோதித்து, கேன்சர் பாதிப்பு இருந்தால், மற்றதையும் எடுத்து விடுவோம்; அப்படி இல்லாவிட்டால், மற்ற நெறி கட்டிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேவையில்லாமல் நெறி கட்டியை அகற்றினால், கை வீக்கம், தோள்பட்டை செயலிழப்பு, காதுகளின் உள்பக்கம் மரத்து போவது ஏற்படலாம்.

பல நேரங்களில், கேன்சர் வந்து குணமான பின், கைகள் யானைக்கால் நோய் போன்று வீங்கி, கனமாக இருக்கும்.

இதை தவிர்ப்பதற்கு, அக்குளில் உள்ள கேன்சர் பாதிக்காத நெறி கட்டிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

டாக்டர் பி.வெங்கட்

மூத்த கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ கேன்சர் மையம், சென்னை.

96770 92586

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us