PUBLISHED ON : ஜூன் 10, 2021

கொரோனா வைரசை பொறுத்தவரை, உலகம் முழுதும் வைரஸ் குறித்து எந்த தீர்மானமான முடிவுக்கும் வர முடியவில்லை; டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் புதிது புதிதாக கற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்.
மருத்துவ சிகிச்சை முறைகளை தாண்டி, நிச்சயம் பாதுகாப்பு தரும், பரவலைத் தடுக்கும் என்று சொல்ல முடிகிற விஷயங்கள், முக கவசம் அணிவது, கை கழுவுதல், சமூக இடைவெளி, இவை தான். வெளி காரணிகளில் இருந்து பாதுகாப்பாக இருந்தால், வைரஸ் தொற்றுவதில்லை.
நிறைய பேர், முக கவசத்தை சரியாகப் போடுவதில்லை. கர்ப்பிணிகள் முக கவசம் அணிந்து வருகின்றனர். யாரிடமாவது பேசும் போது, முக கவசத்தை கீழே இழுத்து விட்டு அல்லது முழுவதுமாக கழற்றி விட்டு பேசுகின்றனர். எதற்காக முக கவசம் அணியச் சொல்கின்றனர் என்ற கவனம் இருப்பதில்லை.
கேட்டால், 'அப்போ தான் பேசுறது கேட்கும்; முக கவசத்தை அணிந்து பேசுவது மரியாதை இல்லை' என, பல காரணங்கள் சொல்கின்றனர். கடந்த ஓராண்டாக தான் பொதுமக்கள் முக கவசம் அணிகின்றனர்.
'ஆப்பரேஷன் தியேட்டர்' அறையில் முக கவசத்தோடு, கவச உடையும் அணிந்து பல மணி நேரம் டாக்டர்கள் இருக்கின்றனர். காது கேட்காமல் எப்படி சக டாக்டர்கள், நர்சுகளிடம் ஒருங்கிணைந்து, ஆப்பரேஷன் செய்ய முடியும்? மரியாதை இல்லை; பேசினால் கேட்காது என்பது தவறு.
சிலர் முக கவசம் அணிந்தாலும் வாயையும், மூக்கையும் இறுக்கமாக மூடி அணிவதில்லை. தானாகவே நம்மை தேடி வந்து வைரஸ் தொற்றாது. நாம் தான் கண்ட இடத்தில் கைகளை தொட்டு, பின் வாய், மூக்கில் வைத்து, வைரசை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம்.
மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. இனி வரும் நாட்களில், இரண்டு அடுக்கு முக கவசம் அணிவது தான் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்,
சென்னை
