PUBLISHED ON : செப் 19, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, அதிகம் பேர் முழுமை யாக குணமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக குணமடைந்து உள்ள நிலையில், அறிகுறிகளே இல்லாமல், நோய் தொற்று ஏற்பட்டு, தானாகவே குணமானவர்களும் இருக்கின்றனர்.
சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற வர்கள், தொற்று ஏற்பட்டதே தெரியாமல், தானாகவே சரியானவர்கள் என்று, பல வகையினரும் உள்ளனர். நோய் தொற்று பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், பாதிப்பில் இருந்து மீள்வது சாதாரணமாக நடக்கிறதா, குணமான பின் ஏதாவது பிரச்னைகள் வருகிறதா, எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அபாய நிலையில் இருந்து, அவசர சிகிச்சை எடுத்து குணமாவது ஒரு பக்கம்; 'மிதமான வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கும், குணமான மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்து, இதயம் தொடர்பான பிரச்னைகள் வருகிறது' என, சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
இவர்கள் அனைவருக்கும், அவசர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசம் போன்ற உயிர் காக்கும் உபகரணங்கள் எதுவும் தேவைப்படவில்லை.
ஜெர்மனியில் செய்யப்பட்ட ஆய்வில், மிகவும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு, எல்லா வைரஸ் தொற்றுக்கும் தரப்படும் எளிமையான சிகிச்சை தரப்பட்டு, ஒரு மாதம் கழித்து, இதய பரிசோதனைக்கான, 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பரிசோதனை செய்யப்பட்டது; இதில், 70 சதவீதம் பேருக்கு, கொரோனா வைரசின் துகள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
நம் நாட்டைப் பொறுத்தவரை, 'கொரோனா அறிகுறி இருந்தது; காய்ச்சல், வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்டு, ஒரு வாரம் வீட்டிலேயே தனிமையில் இருந்தோம்; சரியாகி விட்டது. ஆனால், இன்று திடீரென்று மூச்சு வாங்குகிறது' என்று வருகின்றனர்.
இதய செயல்பாட்டை அறியும், 'எக்கோ' பரிசோதனை செய்தால், இதயத்தின், 'பம்பிங்' திறன் குறைவாக இருக்கிறது. இவர்கள் அனைவரும், 35 வயதிற்குள், கொரோனா வருவதற்கு முன், எந்த இதய பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருந்தவர்கள்.
எம்.ஆர்.ஐ., பரிசோதனையில், வைரஸ் இன்னும் உயிருடன் இதயத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், வைரஸ் பாதித்த, 70 சதவீதம் பேரில், 30 சதவீதம் பேருக்கு, இதய தசைகள் சிதைந்து இருப்பது தெரிந்தது. மற்றவர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இதய தசைகளில் வைரஸ் இருந்தது உறுதியானது.
கொரோனா பாதிப்பில், நுரையீரல் பாதிக்கப்பட்டு, நிமோனியா வந்து இறந்தவர்களின் உடலை, 'போஸ்ட் மார்ட்டம்' செய்து பார்த்ததில், இதயத்திலும் வைரஸ் இருந்தது தெரிய வந்துள்ளது. கடைசி வரை இதயம் நன்றாகவே செயல்பட்டு உள்ளது. இறந்தது நிமோனியா பாதிப்பால் தான்.
இதயத்தில் பாதிப்பு வெளியில் தெரியாவிட்டாலும், வைரஸ், இதயத்திலும் சென்று தங்குகிறது என்று இதிலிருந்து தெரிகிறது. இந்த இரண்டு ஆய்வுகளும், சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகி உள்ளன. நம் நாட்டில், போஸ்ட் மார்ட்டம் செய்து பார்க்கவில்லை என்றாலும், சிகிச்சைக்கு வருபவர்களிடம், இது போன்ற அறிகுறிகளைப் பார்க்க முடிகிறது.
கொரோனா பாதிப்பின் அளவு எப்படி இருந்தாலும், குணமான பின், மூன்று வாரங்கள் கழித்து, எக்கோ பரிசோதனை செய்து, இதயத்தின் செயல்பாட்டை தெரிந்து கொள்வது அவசியம். கொரோனாவின் முக்கிய பாதிப்பு என்பது, ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
பக்கவாதம் வரலாம்
இதுவரையிலும் இருந்த பாதிப்பை வைத்து, தற்போது டாக்டர்கள் சிபாரிசு செய்வது, மிதமான பாதிப்பிற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தியவர்களும், தொடர்ந்து, 45 நாட்கள் ரத்த உறைவைத் தடுக்கும், 'பிளட் தின்னர்' மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும் என்பது தான்.
இதயத்தில் ரத்த உறைவு இருந்தால் மாரடைப்பு வரும்; இதுவே மூளையில் இருந்தால், பக்கவாதம் வரலாம். ரத்தம் உறையும் தன்மை, கொரோனா வைரசிற்கு அதிகம் இருக்கிறது. அதற்காக அனைவரும், எக்கோ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில்லை. கொரோனா பாசிடிவ் என்று உறுதி யானவர்கள், குணம் பெற்று மூன்று வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
தசைகளில் சிதைவு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதற்கான மருந்துகள் தந்து, சிதைந்த திசுக்களின் செயல்பாட்டை, பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்; இது, நிரந்தர சிதைவு இல்லை. கொரோனா என்றில்லை.
எந்த வைரஸ் பாதிப்பாக இருந்தாலும், இதய தசைகளை சிதைக்கலாம். ஆனால், அதன் பாதிப்பு மிக குறைவு. முறையாக சிகிச்சை எடுத்தால், மூன்று - ஆறு மாதங்களில் முழுமையாக குணம் பெறலாம்.
மிதமான அறிகுறிகள் இருந்து கவனிக்காமல் விட்டால், இதய செயலிழப்பு ஏற்படும். இதன் அறிகுறியாக, தலை சுற்றல், மயக்கம், மூச்சு வாங்குவது, கால்களில் வீக்கம் வரலாம்.
இந்த வைரசை பொறுத்தவரை, நுரையீரல் பாதிப்பு தான் பிரதானமானது. ஆனால், நுரையீரல் மிகப் பெரிய உறுப்பு. பாதித்த பகுதியை நீக்கினாலும், இயல்பாக வாழ முடியும். ஆனால், வெறும், 250 கிராம் எடையுள்ள இதயத்தில் பாதிப்பு வந்தால், சரி செய்வது கடினம்.
ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்தால், 80 சதவீதம் இயல்பான நிலைக்கு திரும்ப வாய்ப்புகள் அதிகம்.
'லாக் டவுன்' துவங்கிய முதல் இரண்டு மாதங்கள், வீட்டில் இருந்து வேலை செய்வது, இயல்பாக இருந்த பலருக்கும், அதன்பின் மன அழுத்தம் கொடுத்து உள்ளது.
காரணம், அலுவலகத்தில் இருந்தால், முழு கவனமும் வேலையில் இருக்கும்; வீட்டிற்கு வந்த பின், மற்றவற்றை கவனிக்கலாம். ஆனால், இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது சிரமமாக உள்ளது. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால், இதய கோளாறுகள் வரும் வாய்ப்புகளும் அதிகரித்து உள்ளன.
தொற்று பயம் காரணமாக, வழக்கமாக செய்யும் பரிசோதனைக்கு, வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவ ஆலோசனைக்கு வர தயங்குகின்றனர். 'கொரோனா இல்லாத மருத்துவமனையாக சொல்லுங்கள்' என்று, என்னிடமே கேட்கின்றனர். இப்படி அச்சம் கொள்ள தேவையில்லை.
தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. அதனால், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், தள்ளிப் போடாமல், டாக்டரின் ஆலோசனையை ஆரம்பத்திலேயே பெறுவது, பிரச்னை பெரிதாகாமல் இருக்க உதவும்.
டாக்டர் ரப்ஹாய் ஷொவுக்கதலி,
இதய நோய் சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
044 - 2829 0200

