PUBLISHED ON : பிப் 05, 2012
இன்று புதிய புதிய வியாதிகள் மனிதர்களைத் தாக்குகின்றன. Systemic Luspus Erythemetosus என்ற வியாதி, மூட்டுகளைத் தாக்கும் ஒரு கொடிய வியாதி. ஆங்கில மருத்துவப்படி அதை, auto immune disorder என்றும், இது போன்ற வியாதிகளுக்கு அந்த மருத்துவத்தில் சிகிச்சை கிடையாது என்றும் கூறுகின்றனர். இந்த வியாதி பெரும்பாலும் இளம்பெண்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வியாதியால் தாக்கப்படும் நோயாளிகளுக்கு, வலி நிவாரணி என, பல வித மருந்துகளைப் பயன்படுத்தி, தற்காலிக நிவாரணத்திற்காக மட்டுமே வைத்தியம் நடக்கிறது.
இந்தி வியாதியால் தாக்கப்படும் இளம் பெண்களுக்கு, வேறு பிரச்னையும் உண்டு; கர்ப்ப காலத்தில், கருச்சிதைவு ஏற்பட்டு, கரு வயிற்றில் தங்க இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட பெண்கள் பலர், ஆயுர்வேத சிகிச்சை பெற்று நலமடைகின்றனர்.
இந்த நோயால் தாக்கப்பட்ட மூன்று இளம் பெண்கள், ஆங்கில மருத்துவர் ஒருவரால், சஞ்சீவனி ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அதில் ஒரு பெண்ணிற்கு, வயது, 24. அப்பெண்ணிற்கு வியாதியின் அறிகுறிகள் என்ன என்று ஆராய்ந்தபோது, கீழ்க்கண்டவை தெரியவந்தன. தினசரி ஜுரம், மூச்சு வாங்குதல், கை - பாதங்களில் வீக்கம், சோர்வு, இளைப்பு, பசியின்மை ஆகியவை காணப்பட்டன.
இதே நோயால் அவதிப்பட்ட, 21 வயதுள்ள மற்றொரு பெண்ணிற்கு, மூட்டுக்களில் வலியும், உடலின் பல பகுதிகளில் வலியுடன் கூடிய கட்டிகளும் உண்டாகின. ஏற்கனவே உடலின், 13 இடங்களில், அறுவை சிகிச்சை மூலம், பல முறை இக்கட்டிகள் அகற்றப்பட்டன. ஆயினும், உடலின் வேறு வேறு பகுதிகளில், கட்டிகள் தோன்றின. அப்பெண், பொறியியல் கல்லூரி மாணவி. தாங்க இயலாத வலியால், கல்லூரி செல்வதை நிறுத்தி விட்டு, வீட்டோடு இருந்தார்.
மூன்றாவது பெண்ணிற்கு, 19 வயது. நோயால், கால் விரல்களிலும், கால் மூட்டுக்களிலும், கடுமையான வலி; கால் விரல் ஒன்று, கறுத்த நிறத்திற்கு மாறி இருந்தது. கழுத்துப் பகுதியில், சிறு கட்டிகள், தலைச்சுற்றல், சோர்வு, பலவீனம், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
ஆயுர்வேத சிகிச்சைக்கு வருமுன், அப்பெண்ணின் கழுத்துப் பகுதியிலுள்ள கட்டிகளுக்கு, காசநோய்க்கான மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர, ஸ்டிராய்டு மருந்து, வலி நிவாரண மருந்துகள் என, ஆறு வித மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. சிறிது நேரம் வெயிலில் சென்றால் தலைச்சுற்றல், உடலில் சிவந்த நிற மாற்றம் ஏற்பட்டன.
இந்த நோயால் பாதிக்கப்படும் சில நோயாளிகளுக்கு, முகத்தில் செதில்கள் ஏற்படுகின்றன.
ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த நோயை வாத ரத்தம் என்று அழைப்போம். முறையாக வைத்தியம் செய்தால், நல்ல பயன் அடைந்து, வியாதியிலிருந்து வெளிவர இயலும். வாத ரத்தம் என்ற நோய்க்கு காரணம், பின்வருமாறு: அதிகமான உப்பு, புளிப்பு, நெய்ப்பு, காரம் நிறைந்த உணவுகளை உண்பது, உஷ்ணமான வீரியம் உடைய உணவுகள், வேக வைக்காத பச்சையான உணவு, அதிக வறட்சியான அல்லது அதிக நேரம் நீரில் ஊறிய மாமிச உணவுகள், தயிர், கொள்ளு, எள்ளு, பட்டாணி, கீரைகள், புளிக்கவைத்த பானங்கள், பாலுடன் புளிப்பான உணவுகளைச் சேர்த்து உண்பது, அளவுக்கு அதிகமான உணவை உண்பது, பகலுறக்கத்தை மேற்கொள்வது, இரவில் கண் விழிப்பது, கோபம் போன்ற உணர்வுகள், அதிகமாக வாகனங்களில் பயணம் செய்வது போன்ற காரணங்களால், வாயுவுடன் ரத்தமும் சேர்ந்து, இந்த வியாதியை உருவாக்குகின்றன.
இந்த நோயில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் சேர்ந்து காணப்படலாம். மேற்கூறிய மூன்று பெண்களுக்கும் முறையாக ஆயுர் வேத சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் நோய்க்கும், தோஷங்களின் சேர்க்கைக்கும் உகந்தவாறு, மருந்துகளும், பஞ்சகர்மா என்ற சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் உடலில், சீற்றமடைந்த தோஷங்களை வெளிப்படுத்தும் வாந்தியை வரவழைக்கும் வமன சிகிச்சை, பேதியை ஏற்படுத்தும் விரேசன சிகிச்சை, வஸ்தி என்ற எனிமா சிகிச்சை. நஸ்ய சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டன. மருந்துத் தைலங்களாலும், கஷாய மருந்துகளாலும் செய்யப்படும் எனிமா சிகிச்சை, இந்த வியாதியை நீக்குவதில் தலை சிறந்தது.
இங்கு குறிப்பிட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட மூன்று பெண்களும், இந்த வியாதியிலிருந்து தப்பினர். அவர்களில் இருவருக்கு,
திருமணம் நடந்து, சுகமான பிரசவமும் நடந்தது. பொறியியல் கல்லூரி மாணவி, ஓராண்டுக்குப் பின், தன் படிப்பை முடித்து விட்டு, வேலையில் அமர்ந்தார். வாத ரத்த நோய் தோன்றிய உடனேயே, கால தாமதமின்றி ஆயுர்வேத சிகிச்சையை நாடுவது அவசியம். நாள்பட்ட வியாதியை விட, சமீபத்தில் துவங்கிய நோய், சிகிச்சைக்குக் கட்டுப்படும்.
- டாக்டர் பி.எல்.டி., கிரிஜா, சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம், 63, காமராஜ் அவின்யு முதல் தெரு, அடையாறு, சென்னை-20.
