அலோபதி : விழிப்புணர்வுடன் இருந்தால் வாழ்க்கை எளிதே
அலோபதி : விழிப்புணர்வுடன் இருந்தால் வாழ்க்கை எளிதே
PUBLISHED ON : அக் 02, 2011

கடந்த 2006 - 2008 கால கட்டத்தில் எடுத்த கணக்கின்படி, சென்னையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 1 - 74 வயதுடைய பெண்களில், 29 நபர்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. மகப்பேறு, உணவு முறை ஆகிய வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது.
படிப்பறிவின்மை, விழிப்புணர்வு இன்மை, நிதிப் பற்றாக்குறை ஆகிய காரணங்களால், பெண்கள், தங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவு மற்றும் இதைப் பரிசோதனை செய்து கொள்ளாமல் விடுவது ஆகியவற்றால், நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. வளர்ந்த நாடுகளை விட, நம் நாட்டில், 50 முதல் 70 சதவீத நோயாளிகள், நோய் முற்றிய நிலையிலேயே வருவதால், சிகிச்சையும் கடினமாகிறது.
ஆரோக்கியமான பாதுகாப்பு வசதிகள், நோய் ஏற்பட்டுள்ளது குறித்த துல்லிய கணிப்பு, சிகிச்சை முறை ஆகிய அனைத்துமே, நோயாளி எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறாரோ, அதற்கேற்ப மாறுபடுகிறது. நோயாளியின் நோய் குறித்த கண்ணோட்டம், அவர் வசிக்கும் இடம், அணுகும் மருத்துவமனை, பொருளாதார வசதி, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவை தான், மேலே சொன்ன காரணிகளை நிர்ணயிக்கிறது. எனவே, 30 வயது நிறைந்ததுமே, ஒவ்வொரு ஆண்டும், மார்பகத்தைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய பரிசோதனையும் உண்டு; பரிசோதனைக் கருவிகளும் உண்டு.
உங்கள் சுற்றுப் பகுதியில், சிறந்த மகப்பேறு மருத்துவர் அல்லது புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆகியோர் உள்ளனரா என்பதைக் கண்காணித்து, எப்போதும் குறிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, அங்கு சென்று, பரிசோதனை செய்துகொள்வது மிக மிக அவசியம். நோய் கண்டுபிடிக்கப்பட்டால், அது குறித்துத் தேவையில்லாமல் கவலை கொள்வதைத் தவிர்க்க, சிறந்த, 'கவுன்சிலிங்' முறைகள் உள்ளன. குடும்பத்தினரும் அதற்கேற்பத் தயாராகி விட்டால், புற்றுநோயையும், வாழ்க்கையையும்
வெல்வது எளிதே.
- டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, மார்பக அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை மார்பக மையம்.
