மாத்தியோசி: சோரியாசிசால் பாதிக்கப்பட்டவர்களை தொடக்கூடாதா?
மாத்தியோசி: சோரியாசிசால் பாதிக்கப்பட்டவர்களை தொடக்கூடாதா?
PUBLISHED ON : அக் 02, 2011
தோல்தான் உடலின் மிகப் பெரிய உறுப்பு. உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்கிறது. தொற்று கிருமிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கிறது. ஆனால், நாம் தோலை அழகுபடுத்துவதில் காட்டும் அக்கறையை, அதன் ஆரோக்கியத்தில் காட்டு வதில்லை. தோல் ஆரோக்கியம் காத்தால், உடல் ஆரோக்கியம் காக்கப்படும்.
சோரியாசிஸ் தொற்று நோயா?
சோரியாசிஸ் நோய் தொற்று நோய் அல்ல. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை தொடுவதாலோ, அவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலோ, நோய் பரவாது. எனவே சோரியாசிஸ் நோயாளிகளை ஒதுக்க வேண்டாம்.சுத்தம் இல்லாததால் தான் சோரியாசிஸ் வருகிறது. தவறு. நோய் எதிர்ப்புதன்மையில் ஏற்படும் கோளாறு காரணமாக இந்நோய் வருகிறது. இதற்கும் சுத்தம், சுகாதாரத்துக்கும் தொடர்பில்லை. ஆனால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தோலில் எளிதில் கிருமி தொற்று ஏற்படும். சுத்தம் ஆரோக்கியத்தின் அடித்தளம். சோரியாசிஸ் நோயை குணப்படுத்த முடியும் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். குழந்தைகளுக்கு வரும் கட்டேட் சோரியாசிஸ் நோயை, முழுமையாக குணப்படுத்த முடியும். மற்ற வகை சோரியாசிஸ் நோய்க்கு முறையாக சிகிச்சை எடுத்தால், சிரமங்களை குறைத்து இயல்பு வாழ்க்கை வாழலாம்.
சோரியாசிஸ் நோய்க்கு பாரம்பரிய குறைபாடே காரணம்:
பாரம்பரிய குறைபாட்டால் 40 முதல் 60 சதவீதம் பேருக்கு, இந்நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய குறைபாடு இல்லாமலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஐம்பது பேரில் ஒருவரை இந்நோய் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சோரியாசிஸ் நோய் பாதிப்பு ஏற்படுவது எப்படி?
நோய் எதிர்ப்புதன்மையில் ஏற்படும் தவறான சமிக்ஞைகள் காரணமாக (ஆன்டிஜன்), தோல் செல்கள் (டி செல்கள்) பாதிக்கப்பட்டு, வழக்கத்தை விட வேகமாக வளர்கின்றன. வைரஸ் கிருமிகள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட அன்னிய பொருட்கள் உடலுக்குள் நுழையும் போதுதான் நோய் எதிர்ப்புதன்மை முடுக்கிவிடப்படும். ஆனால், இச்செயல்பாட்டில் சில நேரங்களில் தவறு நிகழ்ந்து, அதன் காரணமாக நோய் எதிர்ப்புதன்மை அதிகரித்து, அதுவே உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இவ்வாறு தவறான தூண்டுதலால் ஏற்படும் நோய் எதிர்ப்புதன்மை (ஆன்டிஜன்) தோலை கடுமையாக பாதிப்பதால், சோரியாசிஸ் நோய் ஏற்படுகிறது.
வழக்கமாக தோல் செல்கள் 28 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை வளர்ச்சி பெறும். அதாவது, தோலின் அடிப்பாகத்தில் உள்ள அடுக்கில் இருந்து மேலடுக்குக்கு செல்கள் வர, 28 நாட்களாகும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் தவறான சமிக்ஞையால், 3 அல்லது 4 நாட்களில் தோல் செல்கள் வளர்ச்சி பெறுகின்றன. இந்த செல்கள் தோலின் மேற்புறத்தில் படிந்து செதில், செதிலாக காட்சியளிக்கின்றன. நாளடைவில் தடித்த சிவந்த படைகளாக மாறுகிறது. இதுவே சோரியாசிஸ் என அழைக்கப்படுகிறது.
பாதிப்புகள் என்ன? இந்நோய் வந்தால், அரிப்பு, வலி, எரிச்சல் இருக்கும். இந்த நோய் பொதுவாக மூட்டுகள், உள்ளங்கை, உள்ளங்கால், தலைப் பகுதியில் காணப்பட்டாலும், உடலின் எந்த பகுதியிலும் வரலாம். இந்நோய் நீண்ட காலம் நீடிக்கக் கூடியது என்பதால், மற்ற நோய்களோடு ஒப்பிடும் போது, இது மிக மோசமான நோயாகவே கருதப்படுகிறது.
மூட்டுகளை பாதித்து ஊனமாக்கிவிடும். எரித்ரோடர்மிக் வகை சோரியாசிஸ் நோயால் உயிருக்கு ஆபத்து உண்டு.
டாக்டர் ஆர். சுகந்தி, தோல் நோய் மருத்துவ பிரிவு தலைவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, சென்னை.
புழுத்த மரக நோய்: புழுத்த மரக நோய் என்று ஒருவித இதய நோய், சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நோயில் உணவு மற்றும் நீரால் குடலில் பல்வேறு வகையான புழுக்கள் உருவாகி, குடல், இதயம் மற்றும் நுரையீரலுக்கு சென்று, இருமல், கோழை வெளியேறுதல், மூச்சு தடுமாறுதல் மற்றும் வலி ஆகியவற்றை உண்டாக்கி, மரணத்தை ஏற்படுத்தும் என, சித்தமருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.
2500 ஆண்டுக்கு முன்பே... ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இந்தியாவில் சிகிச்சையளிக்கும் போது, நாய்ப்புழு என்னும் ஒருவகைப்புழு கல்லீரல், நுரையீரல் மற்றும் இதயம் வரை பல்கி பெருகி இருந்ததை கண்டறிந்து, இதய கருவி மூலம் புழுக்களை வெளியேற்றி மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இதய நோய்க்கு புழுக்களும் காரணமாக இருக்கலாம் என, 2500 ஆண்டுகளுக்கு முன்பே, புழுத்த மரக நோய் பற்றி, சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது.
