PUBLISHED ON : அக் 18, 2020

கொரோனா தொற்று பாதித்தவர்களில், 2 - 3 சதவீதம் பேர் இறந்து போகின்றனர். அரசு புள்ளி விபரங்களை பார்த்தால், கொரோனா பாதித்தவர்களில், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற வாழ்க்கை முறை மாறுதல்களால் ஏற்படும் நீண்ட கால உடல் கோளாறுகள் இல்லாத இளம் வயதினர், 25 சதவீதம் பேர் இறந்து போவது தெரிகிறது. இவர்கள் அனைவரும் நுரையீரல் செயல் இழப்பதால் இறந்து போகின்றனர். கொரோனா பாதித்த நுரையீரல், முழுதும் வெள்ளையாக ஆகிவிடுகிறது.
பிரச்னை
இயல்பான தன்மையில் இருந்து மாறி, கடினமாகியும் விடுகிறது. இதனால், ஆக்சிஜன் பரிமாற்றம் நடப்பதில்லை. பிரச்னை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, ஐந்து அல்லது ஆறு நாட்கள், செயற்கை சுவாச கருவி உதவியுடன் ஆக்சிஜன் கொடுத்தால், நிலைமை சீராகி விடுகிறது. இப்படி கொடுக்கும் ஆக்சிஜன் சிலருக்கு, 2 லிட்டர் தேவைப்படும்; சிலருக்கு, 5 லிட்டர், இன்னும் சிலருக்கு ஒரு நிமிடத்திற்கு, 10 - 15 லிட்டர் ஆக்சிஜன் தர வேண்டியுள்ளது.
ஆக்சிஜன், 15 லிட்டருக்கு மேல் தேவைப்பட்டால், 'ஆக்சிஜன் மாஸ்க்' உதவியுடன் தர முடியாது. வென்டிலேட்டர் பொருத்தி, 100 சதவீதம் ஆக்சிஜன் தரலாம். வென்டி லேட்டர் உதவி தேவைப்படுபவர்களில் தான் இறந்து போகிறவர்கள் இருக்கின்றனர். இதற்கு காரணம், முழு வீச்சில் ஆக்சிஜன் கொடுத்தாலும், முழுவதுமாக தொற்று பாதித்த நுரையீரலில், ஆக்சிஜன் பரிமாற்றம் நடப்பதில்லை; உடலில் ஆக்சிஜன் செல்லாத காரணத்தால் இறந்து விடுகின்றனர்.
இந்த நிலைமைக்கு செல்லாமல் தவிர்க்க, நுரையீரல் எக்மோ கருவியைப் பொருத்தினால் நல்ல பலன் கிடைக்கும். கொரோனா தொற்று பாதித்ததில் இருந்து, மூன்று வாரங்களுக்குள் அந்த வைரஸ் தன் செயல்பாட்டை இழந்து விடும். இந்த நாட்களில் எக்மோ கருவி பொருத்தி, மற்ற உறுப்பு பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், உயிரிழக்கும் அபாயத்தை தவிர்க்கலாம்.
தொண்டை வலி
எக்மோ பொருத்தினாலும் உயிரிழப்பை தவிர்க்க முடியவில்லையே என்ற சந்தேகம் வரலாம். எந்த உடல் கோளாறும் இல்லாத இளம் வயதினர், கொரோனாவால் இறப்பதை தவிர்க்க வேண்டியது முக்கியம். இவர்களுக்கு, நுரையீரல் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கும். வேறு எந்த பிரச்னையும் இருக்காது என்பதால், இந்த முறை நிச்சயம் உதவும்.ஜெர்மனியில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை இந்த முறையில் தான் காப்பாற்றி இருக்கின்றனர்; இதே முறையை தற்போது நாங்களும் பின்பற்றுகிறோம். ஏழு நாட்களுக்கு மேல் அறிகுறிகள் இருந்தால், ஆக்சிஜன் தேவைப்படலாம்.
அதனால், நான்கு நாட்களில் மருத்துவமனைக்கு வந்து விட்டால், உடனடியாக ஆக்சிஜன் தர முடியும். உயிரிழந்தவர்கள் அனைவரும் தாமதமாக வந்தவர்களாகவே இருக்கின்றனர்.உடல் பருமன் உட்பட உடல் கோளாறுகள் இருப்பவர்களுக்கு, அறிகுறிகள் மிதமாக இருந்தாலும், டாக்டரின் மேற்பார்வைகளில் இருப்பது நல்லது. அறிகுறிகள் இல்லாமல் தொற்று பாதிப்பு இருந்தால், நுரையீரல் பாதிக்காது.
டாக்டர் முகமது ரேலா,
நிர்வாக மேலாளர்,
ரேலா மருத்துவமனை,
சென்னை.98840 00104
