PUBLISHED ON : அக் 13, 2020

கால்கள் மரத்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவது, சர்க்கரை கோளாறால் நரம்புகள் பாதித்தால், கால்கள் மரத்து போகும். கால்களில் உள்ள ரத்த நாளங்களின் உள் பகுதியில் கொழுப்பு, கால்ஷியம் போன்றவற்றின் படிமங்கள் சேரும் போது, ரத்த குழாய்களின் விட்டம் குறைந்து விடும்.
இதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், கால்கள் மரத்து போகும்; நடந்தால் கால்களில் வலி ஏற்படும்; உட்கார்ந்து இருக்கும் போது கால்கள், பாதங்கள் மரத்தும் போகலாம்.
இரண்டாவது காரணம், முதுகு தண்டின் எலும்புகளுக்கிடையில் உள்ள மஜ்ஜை நகர்ந்து, முன் பக்கம் வந்து எலும்புகளை, கால்களுக்குச் செல்லும் நரம்பை அழுத்த ஆரம்பிக்கும்; இதனாலும் கால்கள் மரத்துப் போகலாம். இப்பிரச்னையில், முதலில் கால்கள் வலிக்க ஆரம்பிக்கும்; அடுத்து, மரத்து போகும்.
டயட்
சர்க்கரை கோளாறால் கால்கள் மரத்துப் போகும் பிரச்னை இருந்தால், முதலில் உணவுப் பழக்கத்தை சரி செய்ய வேண்டும். டாக்டரின் ஆலோசனைப்படி, அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, உணவுகளை சாப்பிட வேண்டும்.
பொதுவாக, கொடியில் வளரும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றில் நீர்ச்த்து அதிகம் இருப்பதால், இவற்றில் மஞ்சள் பூசணி இனிப்பு தன்மை கொண்டதால், அதை மட்டும் தவிர்க்கலாம்.
விட்டமின் குறைபாடு
விட்டமின்கள், பி1, பி6, பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சோகை இருந்தாலும், கால்கள் மரத்துப் போகும். தெருவோரக் கடைகளில், உணவகங்களில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, வயிற்றில் நாடாப்புழு உருவாவது இயல்பு.
இந்த புழுக்கள், உணவில் உள்ள நுாண்ணுட்டச் சத்துக்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனவே, அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்களுக்கு, ரத்த சோகை இருக்கலாம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வயிற்றுப் பூச்சியை நீக்க மருந்துகள் சாப்பிட்டு, காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே குடிப்பது நல்லது.
தடுப்பு
கால்களில் உள்ள நகங்களை வளர விடக் கூடாது. நகங்களை சுத்தமாக வெட்டி, கால்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
முகத்தை எவ்வளவு சுத்தமாக வைப்போமோ, அதைப் போன்று கால்களை பராமரிக்க வேண்டும்.
விலை உயர்ந்த 'கிரீம்'களை வாங்கி போட வேண்டும் என்பதில்லை; தினமும், தேங்காய் எண்ணெயை கால்களை தடவினாலே போதும். சுத்தமான தரையில் மட்டுமே நடக்க வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில், வெறும் கால்களால் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
உடல் பருமன்
உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள், நீண்ட நேரம் கால்களை தொங்கப் போட்டு, ஒரே இடத்தில் உட்கார்ந்தோ இருந்தால், கால்களில் வீக்கம், மரத்துப் போவது ஏற்படலாம்.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பொறியாளர்கள், கட்டு மான பகுதிகளில் கண்காணிப்பவர்கள், 'வெல்டிங்' வேலை, டீக்கடை சிப்பந்திகள், போலீஸ் கான்ஸ்டபிள், துணிகடை, பெருங்கடைகள் என்று, ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு, இந்தப் பிரச்னை வருகிறது.
'உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை' என்று சொல்பவர்களே அதிகம். காலையில், 5:00 மணிக்கு எழுந்து, அரை மணி நேரமாவது நடக்க வேண்டும்; போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
எப்படி கண்டுபிடிப்பது?
இயல்பாக சிறிது துாரம் நடக்கையில், காலில் வலி, வீக்கம் இருந்தால், தாமதிக்காமல், ரத்த ஓட்டம் கால்களில் சீராக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
தோலில் வறட்சி இருப்பது, பாதங்கள் தடித்து இருப்பது என, இவையெல்லாம் சர்க்கரை கோளாறு வருவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள். அதனால், துவக்கத்திலேயே பரிசோதித்து உறுதி செய்வது நல்லது.
கால்களில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா என்பதை அறிய, 'டாப்ளார்' ஸ்கேன் பரிசோதனை உள்ளது. கைகளில் நாடி பார்ப்பது போன்று, கால்களிலும் இரண்டு நாடிகள் உள்ளன. இவற்றையும் பரிசோதித்து, எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
டாக்டர் எம்.ராஜ்குமார்,
ரத்த நாள மருத்துவர், சென்னை.
98410 25996
