PUBLISHED ON : அக் 11, 2020

கொரோனா வைரசிற்கு எதிரான, பாதுகாப்பாக, வீரியம் மிக்க தடுப்பு மருந்து, எப்போது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்?
கொரோனா தடுப்பு மருந்து குறித்த மகிழ்ச்சியான விஷயம், உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில், 200க்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 31 தடுப்பு மருந்துகள், 'கிளினிக்கல் டெஸ்ட்' என்று சொல்லப்படும், ஆய்வுக்கூட பரிசோதனைக்கு வந்துள்ளன.
தடுப்பு மருந்துகளை, மூன்று கட்டங்களாக சோதனை செய்ய வேண்டும்; இதில், எட்டு தடுப்பு மருந்துகள், கடைசி கட்ட பரிசோதனையில் உள்ளன. பரிசோதனையில், சில தடுப்பு மருந்துகள் நல்ல பலனை தரும் என்ற நம்பிக்கையை தந்துள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில், கொரோனா தொற்றுக்கு எதிராக, இம்மருந்துகள், எந்த அளவு வீரியமாக செயல்படுகிறது என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.
இதன் அடிப்படையில், வீரியம் மிக்க மருந்துகள் அடையாளம் காணப்படலாம்; அவை போதுமான அளவு தயாரிக்கப்பட்டு, எல்லா நாடுகளிலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில், ஒன்று அல்லது இரண்டு தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வரலாம்.
கொரோனா வைரசிற்கு பொருத்தமான தடுப்பு மருந்து, எப்படி இருக்கும் என்று செல்ல முடியுமா?
தற்போது, ஆய்வுக்கூட பரிசோதனையில் உள்ள தடுப்பு மருந்துகளில், வைரசுக்குகு எதிராக, 70 சதவீதம் பாதுகாப்பை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். குறைந்தபட்சம், 50 சதவீதமாவது, தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு தர வேண்டும் என்ற இலக்கை, தற்போது வைத்துள்ளோம். இன்னொரு முக்கியமான அம்சம், பாதுகாப்பு. இந்த தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டால், வேறு எந்த பக்கவிளைவுகளும் இருக்க கூடாது.
எல்லா வயதினருக்கும் ஏற்றதாக, குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டால், நீண்ட காலத்திற்கு, தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டும். ஒருமுறை போட்டால் போதும் என்ற நிலை இருந்தால், இன்னும் நல்லது.
தடுப்பு மருந்தை இயல்பான சூழலில், கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடிய வேண்டும். காரணம், பெரும்பாலான நாடுகளில், தடுப்பு மருந்தை பாதுகாப்பதற்கென்று, பிரத்யேக குளிர்சாதன கிடங்குகள் இல்லை.
நடைமுறைக்கு வரும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது தான் என்பதற்கு, உலக சுகாதார மையம், எந்த வகையில் உத்தரவாதம் தரும்?
கொரோனா தடுப்பு மருந்து விற்பனைக்கு, கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளோம். இது, முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதில், தடுப்பு மருந்தை உபயோகிப்பதற்கு முன், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
தடுப்பு மருந்து தயாரிப்பவர்கள், பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களை, இதற்கென்று உள்ள ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உலக சுகாதார மையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே, 'லைசன்ஸ்' தரப்படும்.
மருத்துவ விஞ்ஞானிகள் கொண்ட குழுவும், தடுப்பு மருந்து பாதுகாப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்பே, ஒப்புதல் வழங்கும்.
தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்தபின், யாருக்கெல்லாம் முதலில் தர வேண்டும் என்பதை, எவ்வாறு முடிவு செய்வீர்கள்?
ஆரம்ப கட்டத்தில் மிகக் குறைவான அளவிலேயே தயாரிக்க முடியும். இது பற்றி, எல்லா நாட்டு அரசிடமும் பேசி வருகிறோம்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, முதல் நிலை களப்பணியாளர்களான, டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தர வேண்டும்; காரணம், அவர்கள் பாதுகாப்புடன் இருந்தால் தான், மற்றவர்களுக்கு உதவ முடியும்.
அடுத்த கட்டமாக, கொரோனா பாதிக்கும் அபாயத்தில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற, வேறு உடல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தரப்படும்.
உலகம் முழுவதும், 70 சதவீதம் மக்களுக்கு வேண்டிய தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய, ஆண்டுக்கணக்கில் ஆகலாம். அதனால், முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, முதலில் தரப்படும்.
டாக்டர் சவுமியா சுவாமிநாதன்,
தலைமை மருத்துவ விஞ்ஞானி,
உலக சுகாதார மையம், ஜெனீவா.

