சுய பாதுகாப்புடன் இருந்தால்... மருத்துவ சிகிச்சையை தவிர்க்கலாம்!
சுய பாதுகாப்புடன் இருந்தால்... மருத்துவ சிகிச்சையை தவிர்க்கலாம்!
PUBLISHED ON : அக் 10, 2020

''இந்த கொரோனா காலத்தில், சுய பாதுகாப்புடன் இருந்தால், மருத்துவ சிகிச்சையை தவிர்க்கலாம்,'' என்கிறார் சத்யா மெடிக்கல் சென்டர் அண்டு ஹாஸ்பிட்டல் மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் யுவராஜ்.
இந்த கொரோனா காலத்தில் அறுவை சிகிச்சைகள், பாதுகாப்பாக செய்யப்படுகின்றனவா?
கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், நாம் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்காப்பு, நோய்தடுப்பு, கவச உடை ஆகியவற்றை அணிந்து கொள்கிறோம். நோயாளியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த பின்பே, சிகிச்சை மேற்கொள்வதால், கொரோனா காலத்திலும் அச்சமின்றி சிகிச்சை பெற முடியும்.
எந்தெந்த அறுவை சிகிச்சைகளை, தற்போது மேற்கொள்ளலாம்?
உடனடி, அவசர அறுவை சிகிச்சையை தற்போது செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையை, தொற்றுக்காலம் முடிந்த பின் செய்து கொள்வதே நல்லது.
அவசர அறுவை சிகிச்சைகளை, எப்படி தரம் பிரிக்கிறீர்கள்?
விபத்து, மகப்பேறு, இருதயம், சிறுநீரகம், குடல்வால், எலும்பு முறிவு ஆகிய சிகிச்சைகள், அவசரகால அறுவை சிகிச்சைகளாகும். குடல் இறக்கம், உடல் எடை குறைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்கு, மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, அறுவை சிகிச்சையை தள்ளிப்போடலாம்.
பண்டிகை காலம் நெருங்குகிறது. கொரோனா தொற்றிலிருந்து நாம் நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது?
மிகவும் முக்கியத்தேவைகளை பட்டியலிட்டு, அனைத்து பொருட்களையும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும் மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. துாசி, குப்பை, புகை போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதோடு, குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளை சரியாக சாப்பிடுவதால், நோய் தாக்குதலில் இருந்து தப்பலாம்.
இப்போதைய காலகட்டத்தில், மருத்துவ சிகிச்சையை தவிர்க்க என்னதான் செய்வது?
சுயபாதுகாப்பு ஒவ்வொருவருக்கும் அவசியம். விபத்தில்லாமல் வாகனங்களை இயக்குவது, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு நடைபயிற்சி மேற்கொள்ளுதல், இரவில் நன்கு உறங்குவது, ஒரு மணி நேரமாவது சூரிய ஒளி (வைட்டமின் டி) உடலில் படும்படி நடப்பது, ஏ.சி.,தவிர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு உண்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற நடைமுறைகளை கடைபிடித்தால், மருத்துவ சிகிச்சையை தவிர்க்கலாம்.

