PUBLISHED ON : அக் 02, 2022

எல்லா நேரமும் ஓய்வே இல்லாமல் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை பாதுகாப்பாக, வலிமையாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீர் குடிப்பது, தினசரி உடற்பயிற்சி, புகை பிடிக்காமல் இருந்தாலே போதுமானது.
இதய நோய் காரணமாக, உலகம் முழுதும் ஆண்டுக்கு, 1.80 கோடி பேர் உயிரிழக்கின்றனர்.உலக அளவில் இதய நோய் காரணமாக அதிக அளவிலான மக்கள் மரணமடைகின்றனர். இதய ரத்த நாள பாதிப்புகள் அல்லது பக்கவாதம் போன்றவை, இது போன்ற இறப்புகளுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் அதிக நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதய நோய் ஏற்படுகிறது என்றும், இது வளர்ந்த நாடுகளில் அதிகம் ஏற்படுகிறது என்றும், மக்களிடையே தவறான கருத்து நிலவி வருகிறது.
ஆனால், 80 சதவீத இறப்புகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளிலேயே ஏற்படுகிறது. இதய நோய்க்கு உடற்பயிற்சி இன்மை, புகை பிடித்தல் மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன.
கொரோனா தொற்று காலத்தில், 'இஸ்கிமிக்' எனும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை காரணமாக இறப்புகள் அதிகரித்தன.உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், இதய நோய் பாதித்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது வைரஸ் தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ள போதிலும், மறைமுகமான பாதிப்பு குறித்து, இதய நோய் பாதித்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
டாக்டர் அசோக்குமார்,
இதய நோய் நுண் துளையீட்டு நிபுணர்,
சென்னை
