PUBLISHED ON : அக் 02, 2022

பொருளாதாரப் பிரச்னை மட்டும் இல்லாமல் இருந்தால், எந்தப் பிரச்னையும் வாழ்க்கையில் இருக்காது என்று நினைக்கிறோம். இது உண்மையானால், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்; ஆனால், உண்மை அப்படி இல்லை.
மன அழுத்தம், மனப் பதற்றம் உட்பட மன நலக் கோளாறுகளின் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடு அமெரிக்கா. அதிலும், கொரோனா பாதிப்பிற்கு பின் நிலைமை மோசமாகி உள்ளது. உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்கு, 'வழக்கமாக செய்யும் அடிப்படை பரிசோதனைகளான ரத்த அழுத்தம், இதய செயல்பாடு இவற்றுடன், 60 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் மன நல பரிசோதனை செய்வதையும் கட்டாயமாக்க வேண்டும்' என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறியதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆமோதித்து இருக்கிறார் என்றால், நிலைமையை உணர்ந்து கொள்ள முடியும்.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் எடுத்த ஆய்வில், 41.5 சதவீதம் பேர் மனப் பதற்றத்தால் பாதித்திருப்பது தெரிய வந்தது. இதற்கு முன் இது, 36 சதவீதமாக இருந்தது. பெண்களில் 40 சதவீதமும், ஆண்களில் 25 சதவீதமும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் மனப் பதற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
என்ன காரணம்?
அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு. உதாரணமாக தினசரி தேவையான முட்டை, ரொட்டி இவற்றின் விலை 39 - 65 சதவீதம் அதிகரித்து உள்ளது. அடுத்த பிரச்னை, கடந்த இரண்டு ஆண்டுகளில் துப்பாக்கி கலாசாரம். திருட்டு, கொலை, கொள்ளை போன்ற வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பில், 10 லட்சம் பேர் அமெரிக்காவில் இறந்து விட, உடல்நிலை சரியில்லை என்றாலே பதற்றமும், பீதியும் கூடவே வந்து விடுகிறது. உலக சுகாதார மையத்தின் அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மனப்பதற்ற பாதிப்பு, உலகம் முழுதும் 25 சதவீதம் அதிகரித்து உள்ள நிலையில், அமெரிக்காவில் இது 40 சதவீதமாக உள்ளது. மனப்பதற்றம், மன அழுத்தம் என்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.
அறிகுறிகள்
குழந்தைகள் மனப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டால், அடிக்கடி வயிறு வலி, தலை வலிக்கிறது என்று சொல்வர். பெரியவர்களுக்கு, சிறிய விஷயத்திற்கெல்லாம் எரிச்சல், துாக்கமின்மை, எல்லா நேரமும் அயர்ச்சி, வேலையில் ஈடுபாடு குறைவது, யாருடனும் அன்பாக பழக முடியாதது போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.மனப் பதற்றம், மன அழுத்தம் இருந்தால் துவக்கத்திலேயே பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து, முறையான ஆலோசனை பெற்று, அதிலிருந்து வெளி வர வேண்டியது மிகவும் அவசியம்.
- 'லான்செட்' மருத்துவ இதழ்
