PUBLISHED ON : மே 28, 2021

குழந்தைகளிடம் காணப்படும் கவனமின்மை, அதீத துறுதுறுப்பு இரண்டும் பொதுவான சிறு வயது கோளாறுகள் என்றாலும், இவற்றால் ஆண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத்துடன் மன கிளர்ச்சி எல்லாராலும் குழந்தைகள் பாதிக்கப்படுவது உண்டு.
கவனமின்மை அறிகுறிகள்:
நாம் சொல்வதை ஒழுங்காக கேட்டு அதன்படி நடக்க மாட்டார்கள். வகுப்பில் பாடங்கள் கவனிப்பதிலும், வேலை செய்யும் போதும், விளையாடும் போதும், அவர்கள் கவனம் நிலைத்திருக்காது.
பள்ளிக் கூடத்தில் பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் என்று நாளுக்கு ஒன்றை தொலைத்து விட்டு வருவர். கேட்டல்புரியாதது போன்று இருப்பர். ஞாபக மறதி அதிகம் இருக்கும்.
அதீத துறுதுறுப்பு அறிகுறிகள்:
எல்லா நேரமும் ஓடுவது, குதிப்பது, மரங்களில் ஏறுவது என்று எதையாவது செய்து கொண்டிருப்பர். அமைதியாக விளையாட மாட்டர். முந்திரிக் கொட்டை போல் பதில் சொல்வர். பிறருக்கு தொல்லைகள் தருவர். ஒரே இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்காரமாட்டார்கள்.
மனக்கிளர்ச்சி அறிகுறிகள்:
அதிகம் பேசுவர். தன் முறை வரும் வரை பொறுமை காக்க மாட்டர். யோசிக்காமல் செயல்படுவர்.
கவனம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். குறிப்பிட்ட சில வேலைகளை செய்ய அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
பயம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.
காரணங்கள்:
மூளையில் சிந்தனையை நிர்வகிக்கும் பகுதியில் சில இடங்களில் போதுமான ரசாயன மாற்றங்கள் சரியாக இருக்காது.
மரபியல் காரணங்களாலும், கர்ப்ப காலத்தில் புகை பிடிப்பதால், புகை பிடிக்கும் கணவன் அருகில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு பிரச்னை வரலாம் என்று சில ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
கருவுற்ற நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பிரசவ நேரத்தில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்கள், அடிக்கடி ஆன்டி பயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது போன்றவையும் பிரச்னைக்கு காரணிகள்.
மூளையில் ஏற்படும் காயங்கள், வெள்ளை சர்க்கரை அதிகம் சாப்பிடுவது இவை இரண்டும் பிரச்னையை ஏற்படுத்தும் அல்லது அறிகுறிகளை மேலும் தீவிரமாக்கலாம்.
குழந்தைகளுக்கு அதீத துறுதுறுப்பு, கவனமின்மை, மனகிளர்ச்சி இருக்கிறதா என ஒரு மனோ தத்துவ மருத்துவர் உதவியுடன் கண்டறிய வேண்டும். கண் பார்வை குறைவு, காது கேளாமை போன்ற வேறு காரணங்கள் இருக்கிறதா என்றும் தெரிந்து கொள்வது அவசியம்.
குறைபாடுள்ள குழந்தைகளை குற்றம் சாட்டுவதும் தண்டிப்பதும் கூடாது. சில குழந்தைகளுக்கு நல்ல மனோதத்துவ ஆலோசனை தேவைப்படும் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
தவறான வளர்ப்பு முறையால் இது வருவதல்ல. ஆனால், சரியான வளர்ப்பு முறை, அதை மேலும் மோசமாகாமல் பாதுகாக்கும்.
டாக்டர் அருண் குமார்
மலையப்பன், முதல்வர்,
சவீதா மருத்துவ கல்லுாரி, சென்னை
