PUBLISHED ON : மார் 18, 2015

அறிவு என்பது, அனுபவம் மூலம் கிடைப்பது. மனிதன், தனது அனுபவம் மட்டுமல்லாது, பிறரது அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்கிறான்.
புத்தகம் என்பது, பிறரது அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மனிதனின் அறிவை,
சக மனிதன் தனக்கும் சமூகத்திற்கும், பயன்படுத்தி கொள்கிறான். அதற்கு பெயர்தான் வேலை அல்லது தொழில்.
இவ்வாறு ஆட்களை தேர்ந்தெடுக்க ஒரு முறையை ஏற்படுத்தியிருக்கிறான். அதற்காக இந்த சமூகம், படிப்பு, பள்ளி, கல்லூரி, பாடத்திட்டம், தேர்வு, மதிப்பெண் முடிவுகள் என்று, ஒரு செயல்முறையை உருவாக்கி உள்ளது.
எனவே, ஒருவருக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும் என்பதை அளவிடத்தான் தேர்வுகளும், மதிப்பெண்களும், முடிவுகளும் பயன்படுகின்றன.
தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு மட்டுமே. தேர்வில் தோல்வி அடைந்ததாலேயே, ஏனையவற்றில் முயன்று, புகழின் உச்சத்திற்கே சென்றோர் ஏராளம்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான், தேர்வு மற்றும் தேர்வின் முடிவுகளுக்கு, முக்கியத்துவம் தர கற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லாதோரே, கல்வியை பற்றி நிர்ணயிக்கும் அதிகாரத்தில் உள்ளனர். எனவே, தேர்வை வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வாக மட்டுமே கருதினால், சோர்வடைய வேண்டிய அவசியமில்லை. அறிவுபூர்வமாக சிந்தித்தால், உணர்வுபூர்வமான முடிவுகளுக்கு வாய்ப்பே இல்லை.
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளினிக்.
9444034647
