PUBLISHED ON : பிப் 28, 2021

தொலை துார பயணங்களில், பாட்டு கேட்பதற்கு பயன்பட்ட, 'ஹெட் செட்' எனப்படும், 'ஹேண்ட்ஸ் ப்ரீ' மொபைல் போனின் அங்கமாகி விட்டதால், எல்லார் காதிலும், எல்லா நேரமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில், ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும், காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல் கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது. பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில் கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே, கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள், முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்; இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ, அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம் கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஓய்வு அவசியம். இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது, 600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும் துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம், எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும் என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை, குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும். பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும், மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள் வரலாம். கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை பரிசோதிப்பதும் அவசியம்.
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
சென்னை.044 - 2461 8199, 98408 13444

