PUBLISHED ON : ஜூன் 16, 2019
சர்க்கரை நோயின் ஆத்திச்சூடி இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை. இதற்கு ஆக்கம் கொடுத்த என் நண்பர் டாக்டர் வேல்முருகனுக்கு நன்றிகள்.
அளவறிந்து உணவுக்கொள்: கட்டைவிரல் அளவு எண்ணெய், கையளவு சோறு, இரண்டு கையளவு காய்கறிகள், இதற்கு மேல் வேண்டாம் என இருகைகளை கூப்பும் மனம்!
ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை: சர்க்கரை நோய் உள்ளவர்கள், வருடம் ஒரு முறையாவது இதயம், சிறுநீரகம், கல்லீரல், கால் நரம்புகள், கண்கள் ஆகியவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
இதயம் சர்க்கரை நோயின் முதல் குறி : நெஞ்சுவலி, இடது தோள்பட்டை வலி, இடது கை குடைச்சல், நெஞ்சு படபடப்பு, தலை சுற்றல், கழுத்துவலி, மேல் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு விரையுங்கள். உடனே ஒரு இசிஜி., எடுக்கச் சொல்லுங்கள்
ஈமத்திற்கான பயணம், காலணியில்லாத நடை: காலணி இல்லாமல் நடக்கும் நடை காலனை நோக்கிச் செல்லும் பயணம்.
உடற்பயிற்சி தினமும் செய்: தினமும் அரை மணியிலிருந்து, ஒரு மணி நேரம் நடப்பது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, இதயத்தை சீராக வைக்கும்.
ஊண், காலமறிந்து உண்: வள்ளுவன் வாக்குப்படி, முன்பு உண்ட உணவு செரித்த பிறகு உணவு உட்கொண்டால், சர்க்கரை நோய் நம்மை அண்டாது.
எண்களை நினைவில் வை: வெறும் வயிற்றில் சர்க்கரை : 80/130mgs/dl, உணவுக்கு பின்:80-180 mgs/dl, ஏ ஒன் சி அளவு <7%, ரத்த அழுத்தம்: 140/90 mm Hg, கெட்ட கொலஸ்டிரால் (LDL-C)<100 mgs/dl
ஏ1சியை கட்டுக்குள் வை: ஏ1சி கடந்த மூன்று மாத சர்க்கரை அளவில் சராசரியை காட்டும் முக்கியமான ரத்த பரிசோதனை. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்த அளவு 7% கீழ் இருந்தால் நல்லது. இந்த பரிசோதனை மூன்றிலிருந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து கொள்ள வேண்டும்.
ஐயங்களை களைந்துவிடு: சர்க்கரை நோய் பற்றிய உஙகள் ஐயங்களை களைந்துவிடுங்கள் - அறிவின் மூலம், தக்க மருத்துவ ஆலோசனை மூலம், முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த நோய் இருந்தால் அவர்கள் வாழ்க்கை அஸ்தமித்துவிடாது. வாழ நினைத்தால் வாழலாம் என்ற மனப்பகுத்தவத்தை அந்த குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
புகை பிடிப்பது மது அருந்துவது உயிரை எடுக்கம். ஒழுக்கத்தை பற்றிய வள்ளுவரின் வாக்கு வேத வாக்கு.
ஓர்மை (துணிவு) கொள்: பயந்தால் வேலைக்கு ஆகாது. சர்க்கரை நோய் என்ற பகைவனை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும்.
அவுடதம் மறவேல்: மூன்று ரூபாய் மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் இதயம், மூளை, கால் கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு மூன்று லட்சத்திற்கு மேல் செலவு செய்ய வேற்டியிருக்கம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுக்கவில்லை எனில் விலை மதிப்பில்லாத உயிருக்கு உலை வைத்து விடும்.
பங்காளிகள்: ஏ பி சி நோய்கள் என்று இந்த மூன்று வில்லன்களின் கூட்டணியை மருத்துவர்கள் சொல்வார்கள்... ஏ என்றால் சர்க்கரை நோய் (A1C), பி என்றால் ரத்தக் கொதிப்பு(BP), சி என்றால் கொழுப்பு கொலஸ்ட்ரால், இந்த மூவரும் மோசமான வில்லன்கள், பங்காளிகள். சர்க்கரை, பிரஷர், கொலஸ்டிரால் மாத்திரைகளை மருத்துவரிடம் கேட்காமல் நிறுத்தக் கூடாது.
டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,
கோவை.
85264 21150
