"ஆட்டிசம்' அறிகுறிகளை இளம் பெற்றோர் அறிய வேண்டியது அவசியம்
"ஆட்டிசம்' அறிகுறிகளை இளம் பெற்றோர் அறிய வேண்டியது அவசியம்
PUBLISHED ON : ஏப் 14, 2013

'ஆட்டிசம்' என்பது ஒரு நோய் அல்ல; மனவளர்ச்சி தொடர்பான ஒரு கோளாறு. ஒரு குழந்தையை, பேச்சு மூலமோ, வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. இந்தியாவில், 20 லட்சம் பேர் வரை, இக்குறைபாடிற்கு ஆளாகி உள்ளனர் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த குறைபாட்டிற்கு உடல் ரீதியான அறிகுறிகள் கிடையாது என்றாலும், பிறந்த மூன்று வயதிற்குள், இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதற்கான அறிகுறிகள் தெரிய வரும். அவற்றின் அடிப்படையில், 'ஆக்குபேஷனல்தெரபி' அளிப்பதன் மூலம், இந்த பாதிப்புக்கு ஆளான குழந்தைகள், தங்கள் குறைபாட்டை எதிர்கொண்டு, சராசரி வாழ்க்கை வாழ இயலும். இல்லையெனில், 'ஆட்டிசம்' வாழ்நாள் முழுவதும் அவர்களை ஆட்டிப் படைக்கும் அரக்கனாக மாறும் அபாயம் உண்டு.
'ஆட்டிசம்' குழந்தைகளுக்கு, அதில் இருந்து விடுபட, தக்க நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம். இதற்கு, 'ஆட்டிசம்' அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு, இன்றைய இளம் பெற்றோருக்கு அவசியம்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட, 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளின் அறிகுறிகள்:
* தனிமையை விரும்புவது
* உடல் நலக்குறைவு போன்ற நேரத்தில், பிறரின் அரவணைப்பை விரும்புவதை வெளிக்காட்ட தெரியாதது
* மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வில்லாதது
* கூடி விளையாடும்போது, தனக்குரிய தருணத்தை பயன்படுத்திக்கொள்ள தெரியாதது
* குழந்தையின் முதல் வார்த்தை வழக்கத்திற்கு மாறாக இருப்பது
* தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு, திரும்ப, திரும்ப சுற்றுதல், வரிசைப்படுத்துதல் போன்ற செயல்களை செய்வது
* ஒரு பொருளில், குறிப்பிட்ட ஒரு பாகத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது,
* பேச்சில் தெளிவில்லாமை
* தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப, திரும்ப சொல்வது
* கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது, கைகளை சுழற்றுவது, தலையை இடித்துக் கொள்வது போன்ற மாறுபட்ட உடல் செய்கைகள்
* அதீத பயம்
* சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட, ஏற்றுக் கொள்ளாமல் துன்பப்படுவது
* தினசரி செய்யும் வேலைகளை, அதே வரிசைப்படி செய்ய பிடிவாதம் பிடிப்பது
* சிறுநீர், மலம் கழிக்க பயிற்சி பெறுவதில் சிரமம்
இவற்றில், மூன்று முதல் ஆறு அறிகுறிகளுடன், பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காதது, கண்களை பார்த்து பேசாதது, சிரித்தால் பதிலுக்கு புன்னகைக்காதது போன்ற குறைபாடுகள் இருந்தால், அக்குழந்தைக்கு, 'ஆட்டிசம்' குறைபாடு இருக்க, வாய்ப்புகள் அதிகம். இக்குழந்தைகளுக்கு, 'ஆக்குபேஷனல்தெரபி'யில், உணர்வுகளை ஒருங்கிணைக்கும் பயிற்சியை, 6 மாதங்கள் வரை அளிப்பதன் மூலம், அவர்களை, 'ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து விடுவிக்கலாம்.
டாக்டர் பா.சுகுமார்,
ஆக்குபேஷனல்தெரபிஸ்ட்,
சென்னை, 98404 81127.