தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தானாக சிறுநீர் வெளியேறுவதை தவிர்க்கலாம்!

தானாக சிறுநீர் வெளியேறுவதை தவிர்க்கலாம்!

தானாக சிறுநீர் வெளியேறுவதை தவிர்க்கலாம்!


PUBLISHED ON : ஜன 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

மகப்பேறு, மெனோபாஸ், மூப்பு ஆகியவை காரணமாக, பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. வயிற்றின் அடிப் பகுதி, பிறப்புறுப்புத் தசை ஆகியவற்றில் தளர்ச்சி அல்லது தொய்வு ஏற்படுகிறது. இதனால், சிறுநீர் பை சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் வெளியேற்ற வேண்டிய உந்துதல், சிறுநீர் தானாகவே வெளியேறுதல், இருமும்போது, தும்மும்போது, 'குபீர்' சிரிப்பு சிரிக்கும் போது, சிறுநீர் தானாகவே வெளியேறுதல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

இதைத் தடுக்க, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரை நாட வேண்டியது அவசியம். முதலில் சிறுநீரில் கிருமிகள் உள்ளனவா என்பதை, உறுதி செய்ய வேண்டும். சிறுநீர், எந்த நேரத்தில் வெளியாகிறது என்ற, கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.

இதை வைத்து, எவ்விதமான சிகிச்சை தேவை என்பதை, நிபுணர் முடிவு செய்வார். தேவைப்படின், மேலும் பல சோதனைகள் செய்வார்.

சிறுநீர்ப் பையின் தசைத் துடிப்பால் ஏற்படும் உபாதையை, எளிதில் குணப்படுத்தி விடலாம். காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது மிக அவசியம். மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளியில், சிறுநீர் செல்லுதல் என்ற வழக்கத்தை, மிகவும் சிரத்தையாகக் கடைபிடிக்க வேண்டும். 2.5 முதல் 3 லிட்டர் வரை, தண்ணீர் குடிக்க வேண்டும்.

இரவு, 7:00 மணிக்கு மேல், நீராகாரம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பிட்ட உபாதைகளை, மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். சிறுநீர்ப் பையின் வாயில் ஏற்படும், தசை தளர்ச்சிக்கு, உடற்பயிற்சி நிபுணரையோ, அறுவை சிகிச்சை நிபுணரையோ அணுக வேண்டும்.

இந்த தசைகளை, எப்படி வலுவாக்குவது என்பதைக் கற்றுக் கொடுத்து, நீங்கள் செய்யும் பயிற்சியையும், அவற்றின் பயன்களையும் கண்காணிப்பார். சிலருக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். சிறுநீர்ப் பையின் வாயில், நாடா போன்ற பொருளைப் பொருத்தி, அத்தசைகளை வலுவாக்கக் கூடிய அறுவை சிகிச்சை, 85 சதவீதம் பயனளிக்கக் கூடியது.

சிறுநீர் தானாக வெளியேறும் உபாதை உள்ள பெண்களுக்கு, இது மிகவும் சிறந்த சிகிச்சை. சர்க்கரை நோயோ, ரத்தக் கொதிப்போ இல்லாதவர்கள், இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின், அன்றே வீடு திரும்பி விடலாம். வெளியில் காயம் தெரியாது; தனியாக சிறுநீர் டியூப் வைத்துக் கொள்ளவும் தேவையில்லை.

டாக்டர் மீரா ராகவன்,

அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.

044 60601066.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us