கர்ப்பப்பை வாய் கேன்சர் எளிதாக கண்டறிய 'பேப் - ஸ்மியர்'
கர்ப்பப்பை வாய் கேன்சர் எளிதாக கண்டறிய 'பேப் - ஸ்மியர்'
PUBLISHED ON : டிச 25, 2022

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்று. இதற்கு தடுப்பு மருந்துகள் பல ஆண்டுகளாகவே இருக்கின்றன; ஆனால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
'பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்...' என்று இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்கள், மாதத்திற்கு ஒன்று, அதன்பின் நான்காவது மாதத்தில், ஒரு 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டும்.
குறிப்பிட்ட இந்த கேன்சரை உண்டாக்கும் மரபணு உள்ளவர்களுக்கு, 'ஏழு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு தரும்' என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 15 வயதிற்குள் இரண்டு ஊசி போதுமானது.
'ஹியூமன் பாப்பிலோனா'
இது தவிர, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, 'பேப் - ஸ்மியர்' பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனை செய்தால், கர்ப்பப்பை வாயில் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை, 15 ஆண்டுகளுக்கு முன்பே கூட கண்டறிய முடியும். மிக எளிமையான பரிசோதனை இது. வலியோ, மயக்க மருந்தோ தர வேண்டியது இல்லை.
பாதுகாப்பற்ற தாம்பத்திய உறவு, சுகாதாரமின்மை காரணமாக, ஹெச்.பி.வி., எனப்படும் 'ஹியூமன் பாப்பிலோனா' வைரஸ் தொற்ற லாம். இந்த வைரஸ், கேன்சரை துாண்டக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்த வைரசால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கும் அது கேன்சரை உருவாக்கும் என்று சொல்ல முடியாது.
எளிதாக கண்டறியலாம்
கர்ப்பப்பை வாய் கேன்சர் பாதித்தால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இருக்காது. அதன் பின், உடலுறவின் போது வலி, இடுப்பெலும்பில் வலி, துர்நாற்றத்துடன் திரவம் வடிவது, மாதவிடாய் இல்லா நேரங்களிலும் ரத்தக் கசிவு, சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம்.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், 90 சதவீதம் முழுமையாக குணப்படுத்த முடியும். 30 - 65 வயது வரை உள்ள பெண்கள், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது. கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசி, பல நேரங்களில், மற்ற கேன்சரையும் தடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மற்ற எல்லா வகை கேன்சரை விட, சுலபமாக தடுக்க முடிவது கர்ப்பப்பை வாய் கேன்சர். ஆனாலும், பெண்களை பாதிக்கும் கேன்சர் வகைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வழக்கமான கேன்சர் சிகிச்சைகளான 'கீமோ தெரபி' கதிரியக்க சிகிச்சையுடன் தற்போது கேன்சர் செல்களை மட்டும் அழிக்கும், 'டார்கெட்டெட் தெரபி, இம்மினோதெரபி' போன்றவையும் உள்ளன.
எல்லா பெண்களும், 21 வயது முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 'பேப்ஸ்மியர்' பரிசோதனை செய்து கொண்டால், நோயை ஆரம்ப நிலையிலேயே எளிதாக கண்டறிய முடியும்.
டாக்டர் எம்.ஏ.ராஜா,
கேன்சர் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
எம்.ஜி.எம்.ஹெல்த் கேர்,
சென்னை.044 - 4524 2407
